OTT Review: இந்த வாரம் ஓடிடியில் பார்க்க ஒரு வொர்த்தான வெப்சீரிஸ்.. ஸ்பெஷல் ஆப்ஸ் 2 விமர்சனம்!
சென்னை: 'ஸ்பெஷல் ஆப்ஸ் 2’ தொடரின் ஏழு எபிசோடுகளும் ஏறத்தாழ 50 முதல் 57 நிமிடங்கள் வரை ஓடக்கூடியவை. பொதுவாக திரைப்படங்களின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கும் சூழலில், பல வெப் சீரிஸ்களும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. ஆனால், நீரஜ் பாண்டே மற்றும் ஷிவம் நாயர் இணைந்து இயக்கியுள்ள 'ஸ்பெஷல் ஆப்ஸ்’ தொடர், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ளது.
ரா உளவு அமைப்பின் அதீத புத்திசாலியான அதிகாரி ஹிம்மத் சிங் (கே.கே. மேனன்), புன்னகையுடன் பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனில் தொடர்புகளை ஏற்படுத்தி தனது குழுவினரை பத்திரமாக அழைத்துச் செல்கிறார். முதல் பாகம் முடிந்த இடத்தில் இருந்து தொடங்கும் இந்த பாகத்தில், வழக்கமான சந்தேக நபர்களுடன், காலத்திற்கேற்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஸ்பெஷல் ஆப்ஸ் 2 கதை: புத்தபெஸ்டில் ஏ.ஐ. நிபுணர் (ஆரிஃப் சக்கரியா) கடத்தப்படுவதோடு வெப் சீரிஸ் தொடங்குகிறது. அதே நேரத்தில் டெல்லியில் ஒரு ஏஜென்ட் (டோட்டா ராய் சௌத்ரி) சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? நீண்ட காலமாக நிழலில் இருந்த வில்லன் இப்போது வெளியில் வந்து அழிவை ஏற்படுத்துவது ஏன்? எதிரிக்கு நமது ரகசியங்களை கசிய விடுவது யார்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க கே.கே. மேனன் தலைமையிலான குழு களமிறங்குகிறது.
சீனா, சைபர் தாக்குதல்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க திட்டமிடுகிறது. இதற்கு பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் சுதிர் அவஸ்தி (தாஹீர் ராஜ் பாசின்) உதவுகிறார். அவர் ஒரு பழைய திரைப்பட ரசிகர் என்பது அவர் மறைந்திருக்கும் இடத்தை பார்த்தாலே தெரிகிறது. ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் தலைமறைவாக இருக்கும் குஜராத்தி கோடீஸ்வரர்களால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பக்காவான வெப்சீரிஸ்: வங்கிகளில் பணம் இல்லாத சூழலில், பிரகாஷ் ராஜ் தனது மனைவியை காப்பாற்ற போராடுகிறார். வங்கியில் வெறும் 1000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவை வங்கி மேலாளர் தெரிவிக்கிறார். இது தொடர்பாக கே.கே. மேனனை பிரகாஷ் ராஜ் தொடர்பு கொள்கிறார். ஆனால், இது தன் துறை இல்லை என கே.கே.மேனன் பதிலளிக்கிறார். இந்த இரு பிரச்னைகளுக்கும் என்ன தொடர்பு, கடத்தப்பட்ட ஏ.ஐ. நிபுணர் தான் இந்தியாவின் அனைத்து முக்கிய பாதுகாப்பான இடங்களுக்கே சாவி என்பது தெரிய வரும் இடத்தில் வெப் சீரிஸ் சூடு பிடிக்கிறது.
ஸ்லோவேனியா, செர்பியா, ஜார்ஜியா போன்ற இடங்களில் கொலைகள் நடக்கின்றன. ராவல்பிண்டியில் கலவரங்கள் வெடிக்கின்றன. ஐ.எஸ்.ஐ சொத்து ஒன்று பயன்படுத்தப்படுகிறது. ஹிம்மத் மற்றும் அவரது குழு (கரண் டேக்கர், முஸம்மில் இப்ராஹிம், சாயாமி கெர், மெஹர் விஜ், ஷிகா தல்சானியா, காமாக்ஷி பட்) குற்றவாளிகளைத் தேடி நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறார்கள்.
ஹிம்மத்தின் மனைவி (கௌதமி கபூர்), தனது கணவனின் ரகசியத்தை மகளிடம் இருந்து மறைக்க முயற்சிக்கிறார். பழைய போலீஸ் அதிகாரியான வினய் பதக் மற்றும் ஹிம்மத் ஆகியோர் கிரீன் டீ பற்றிய நகைச்சுவையை பேசுகிறார்கள். ஓய்வு பெற்ற உளவாளியாக பிரகாஷ் ராஜ் தொடரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார். கேள்வி கேட்கும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் என்றும் அதனால்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்கிறார்.
பார்க்கலாமா? வேண்டாமா?: சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் நிலை பற்றியும் ஒரு வசனம் உள்ளது. ஜாங் என்பவர் தவறான செயல்களில் ஈடுபடுகிறார். வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த ஜிக்னேஷ் தோலாக்கியா என்பவர் ஒரு பங்களாவில் மறைந்து இருக்கிறார். இந்த கதைகள் மூலம், உலகத்தை யார் இயக்குகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயக்குனர். ராஜ்ஜின் கதாபாத்திரத்தின் மூலம், மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். அதுமட்டுமின்றி ஏதாவது செய்யுங்கள் இல்லையென்றால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர் கூறுவது ஏ வெட்னஸ்டே திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது.
சக்கரியா ஒரு காட்சியில், பழங்காலத்தில் இந்தியா ஒரு தொழில்நுட்ப வல்லரசாக இருந்தது என்று கூறுகிறார். இதைக் கேட்டவுடன் அவர் வாயில் டேப் போட்டு கடத்திச் செல்லப்படுகிறார். படத்தின் நீளம் கருதி சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், இந்த உளவு பார்க்கும் கதை விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. கே.கே. மேனன் தனது அலுவலகத்தில் இருந்தபடியே, தனது திறமையான அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு எப்படி இந்த ஆபரேஷனை கொண்டு போகிறார் என்பதை நிறுத்தி நிதானமாக பல சுவாரஸ்ய வசனங்கள் மற்றும் வியக்க வைக்கும் காட்சிகளுடன் பிரம்மாண்ட புரொடக்ஷன் வேல்யூவுடன் காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளனர். ஒவ்வொரு எபிசோடும் 50 நிமிடங்களுக்கு மேல் ஓடுவது தான் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











