Gangers Review: கவலை மறந்து சிரிக்க வைக்கிறதா கேங்கர்ஸ்.. வடிவேலு சுந்தர் சி காம்போ எப்படி இருக்கு?
சென்னை: வின்னர், லண்டன், கிரி, தலைநகரம், நகரம் படங்களுக்கு பிறகு சுந்தர் சி -வடிவேலு காம்போவில் உருவாகியிருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். இப்படம் இன்று வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரண்மனை சீரிஸ் படங்களை இயக்கி வந்த சுந்தர் சி மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீீண்டும் சிரிப்பு சரவெடியை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். மேலும், வடிவேலு - சுந்தர் சி காம்போவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? உச்சு கொட்ட வைத்திருக்கிறதா என்பதை இதில் காணலாம்.
படத்தின் கதை: சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் கேங்கர்ஸ் படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், வடிவேலு, முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி, அருள்தாஸ், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான கேங்கர்ஸ் படத்தின் முதல் காட்சி வழக்கமான சுந்தர் சி படங்களில் வரும் அரசியல்வாதிகளிடம் இருந்தே கதை தொடங்குகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சுஜிதா (கேத்ரின் தெரசா) மாணவி காணாமல் போனதை கண்டுபிடிக்க கமிஷனருக்கு மனு எழுதுகிறார். மேலும் அதே பள்ளியில்
பி டி மாஸ்டராக இருக்கிறார் சிங்காரம் (வடிவேலு). அவருக்கு போட்டியாக புதிதாக வந்து சேர்கிறார் சரவணன் (சுந்தர் சி). உள்ளூர் அரசியல்வாதிகளான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் பள்ளியை தங்களது சாராய விற்பனை மற்றும் இன்னும் சில தவறான செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இதனை பொருத்துக்கொள்ள முடியாத சுந்தர் சி இருவரையும் மறைந்திருந்து அட்டாக் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் ஹீரோவுக்கு பதிலாக காமெடியன்கள் மாட்டுவது போன்று வடிவேலு போடும் கெட்டப்புகளால் சிக்கலை தேடிக்கொள்கிறார். படத்தின் முதல் பாதியோடு டைவர்ஷன் எடுத்து இரண்டாம் பாதியில் புதிய ரூட்டில் செல்கிறது கேங்கர்ஸ். முடியரசனாக வரும் ஹரிஷ் பேரடியிடம் இருக்கும் 100 கோடியை கொள்ளையடிப்பதே கதையாக இருக்கிறது.

விமர்சனம்: கேங்கர்ஸ் படத்தில் கதை என்று புதிதாக சொல்ல முடியாது. சுந்தர் சி படங்களில் இடம்பெறும் அதே பழைய டெம்பிளேட் மசாலாக்கள் நிறைந்த காமெடி படமாக இருக்கின்றன. முதல் பாதியில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. கதை இதுதான் என்பதை யூகிக்க முடிந்தாலும் சகிக்க முடியவில்லை. ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் காணாமல் போவதாக கதை தொடர்வதும் பிறகு கதை செல்லும் விதமும் நகைச்சுவையாக இருக்கிறது. அரசு பள்ளி மாணவிக்கு பீஸ் கட்ட முடியாத நிலையா இந்த லாஜிக் ஓட்டையை கொஞ்சம் சரி செய்திருக்கலாம் சுந்தர் சி சார். இரண்டாம் பாதியில் தான் ஒட்டுமொத்த கதையையும் வைத்து பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. அதற்காக முதல் பாதியை பார்வையாளர்கள் கண்ணை கட்டி கொண்டா பார்க்க முடியும் என்ற நிலையே தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் வடிவேலு - சுந்தர் சி காம்போ ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இதில் முனிஷ்காந்த், பக்ஸ், காளை என ரவுண்டு கட்டி காமெடி கலாட்டாவே செய்திருக்கிறார்கள். முதல் பாதி சோதனையாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் சிரித்துக்கொண்டே இருக்கலாம். படம் முழுக்க சுந்தர் சி நாயகனாக இருந்தாலும் கேங்கர்ஸ் படத்தை வடிவேலு தூக்கி நிறுத்தியுள்ளார்.
பிளஸ்: கேங்கர்ஸ் படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது கதாப்பாத்திரம் உணர்ந்து காமெடி காட்சிகளுக்காக முடிந்தவரை முயற்சித்துள்ளனர். சுந்தர் சி படங்களில் லாஜிக் எதிர்பார்க்க கூடாது என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கும் படமாக கேங்கர்ஸ் இருக்கிறது. இப்படத்தில், மதகஜராஜா படத்தின் ரிலீஸை கொண்டாடும் விதாமக காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திரையரங்கில் நடக்கும் க்ளைமேக்ஸ் காட்சியில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு வடிவேலு, பக்ஸ் கூட்டணி ஃபன் செய்துள்ளனர். படத்தில் கதை இல்லாவிட்டாலும் வடிவேலு காமெடி அசத்தலாக இருக்கின்றன. இதுதான் வடிவேலுவின் கம்பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். வெவ்வேறு கெட்டப்புகளில் வரும் வடிவேலு எனர்ஜி குறையாமல் படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட் காட்சிகள், நடிகர் விமலின் கேமியோ ரோல்கள் பாராட்டை பெறுகிறது.

மைனஸ்: 100 கோடியை கொள்ளையடிப்பது தான் கதை என்றாலும் அரசு பள்ளியில் மாணவிகள் காணாமல் போவது, அதனை கண்டுபிடிக்க போலீஸ் மாறுவேடத்தில் பள்ளிக்கு வருவது என காட்சிகளை நகர்த்தி ட்விஸ்ட் வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. ஆனால், பார்ப்பவர்களுக்கு அது ஒரு காட்சியாகவே நகர்ந்து செல்கிறதே தவிர ட்விஸ்டாக இல்லை. நடிப்பவர்களுக்கு அது ட்விஸ்டாக இருந்திருக்கலாம் போல. முதல் பாதியில் என்ன கதை என்று பார்வையாளர்களை தேட விடுகிறார். வழக்கம்போல நடிகைகளுக்கு பெரிதான கதாப்பாத்திரம் இல்லாத சுந்தர் சி படமாகவே இருக்கிறது. கவர்ச்சி நடனம், 4 ஆக்சன் காட்சிகள் வயிறு குலுங்க காமெடியாகவே இருப்பது வருத்தம் தான். வின்னர், கிரி படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகளை மீண்டும் ஞாபகப்படுத்துவது போலவே வடிவேலு பேசும் வசனங்களும் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பார்த்த காட்சிகளை திரும்ப பார்ப்பது போன்ற அசதியை தருகிறது. 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் கொஞ்சம் நீளத்தை கத்தரித்திருக்கலாம்.
பின்னணி இசை: கேங்கர்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் கேத்ரின் தெரசா நடனம் ஆடும் ஐட்டம் பாடலை தவிர மற்ற பாடல்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. சுந்தர் சி வரும் இன்ட்ரோ காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளுக்கு அதீத மெனக்கடல் இருப்பதாக தெரிந்தாலும் பின்னணி இசை சுமார் ரகம் தான். கதையே இல்லாத படம் போல இசையே இல்லாத கேங்கர்ஸ் படம் என்பது போலத்தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. பாடல்கள் பெரிதாக கவனம் ஈரக்கவில்லை.

காமெடி மன்னன் வடிவேலு: மாமன்னன் படத்தில் சீரியஸான கதாப்பாத்திரங்களில் நடித்து நல்ல நடிகர் என்று பாராட்டை பெற்றாலும், முழு நீள காமெடி படங்களில் வடிவேலு இல்லை என்பது குறையாக இருந்தன. அந்த குறையை கேங்கர்ஸ் படம் மூழம் நீங்கியுள்ளது. இப்படம் அடிக்கும் வெயிலில் திரையரங்கில் சிரிப்பு சரவெடியை காணலாம். வடிவேலு அடிக்கும் கமெண்ட்களுக்கு ரசிகர்களின் சிரிப்பு சத்தம் ஓயவில்லை. 100 கோடியை ஆளுக்கு 5 பேர் பங்கு கேட்பதும், அதற்காக தனி ஒரூ டீம்தான் கேங்கர்ஸ் என்ற வசனத்திற்கு விசில் சத்தம் காதை கிழிக்கின்றன. வடிவேலுவும், சுந்தர் சியும் வில்லன் வீட்டுக்குள் புகுந்து சாவியை தேடும்போது இளையராஜா பாடல் ஒலிக்கும். அப்போது ஆஹா இளையராஜா ராயல்டி கேட்பாரே என்றே ரசிகர்களின் மனநிலை இருந்தது. ஒவ்வொரு சீனுக்கும் வடிவேலு வித்தியாசம் காட்ட முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது. புது கூட்டணியோடு காமெடியில் கலக்கியிருக்கிறார் வடிவேலு.
கேமியோ ரோல்: இப்படத்தில் எடுத்துக்காட்டில் நடித்திருக்கும் வாணி போஜன் தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை கட்சிதமாக செய்திருக்கிறார். கலகலப்பு படத்தில் இருக்கும் மாதவி, சரவணன் கதாப்பாத்திரங்கள் இப்படத்தில் இடம்பிடித்திருக்கின்றன. நடிகர் விமல் கேமியோ ரோலில் வந்து கைதட்டலை பெறுகிறார். சரவணன் பெயரில் சுந்தர் சி செய்யும் ஆள்மாறாட்டம் என நல்ல ட்விஸ்ட் காட்சியாக இருக்கிறது. இப்படத்தில் எதற்காக 100 கோடியை கொள்ளையடிக்க வேண்டும் என்ற கேள்வி மட்டுமே நல்ல ட்விஸ்ட். மேலும், கலகலப்பான காமெடி ரூட்டில் சென்று எல்லோரையும் கலங்கடித்திருக்கிறது கேங்கர்ஸ்.


Click it and Unblock the Notifications











