Thandakaaranyam Review: தண்டகாரண்யம் விமர்சனம்.. உறைய வைக்கும் உண்மைச் சம்பவம்.. வொர்க்கவுட் ஆனதா?
சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன், சபீர் கல்லரக்கல், ரித்விகா, வின்சு ரேச்சல், பால சரவணன் மற்றும் முத்துகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தண்டகாரண்யம் திரைப்படம் செப்டம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில், அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி போடப்பட்ட நிலையில், படத்தில் பேசப்பட்ட அரசியல் மற்றும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதை பார்க்கும் போது இப்படியெல்லாம் நடந்ததா? என்கிற பதபதைப்பு ஏற்படத்தான் செய்கிறது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் நக்சல்களை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் நடத்திய நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் இயக்குநர் அதியன் ஆதிரை வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
தண்டகாரண்யம் கதை: வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பழங்குடி வனப் பாதுகாப்பு ஊழியர், நக்சல் எதிர்ப்புத் திட்டத்தில் சேர்கிறார். தான் இறப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை பின்னர் உணர்கிறார்.
வனத்துறையிலிருந்து ரேஞ்சர் (அருள்தாஸ்) மற்றும் பிக்ஸர் (முத்துக்குமார்) ஆகியோரால் வெளியேற்றப்பட்ட முருகன் (கலையரசன்), பிரியாவுடன் (வின்சு ரேச்சல் சாம்) ஒரு எதிர்கால வாழ்க்கையை எதிர்நோக்குகிறார். அவர் ரூபேஷுடன் (பாலா சரவணன்) ஜார்கண்டில் உள்ள ஐ.எஸ்.ஜி.எஸ்.ஸில் இணைகிறார். அங்கு சேருபவர்கள் முதலில் "சரணடைந்த நக்சலைட்டுகள்" என்று கையெழுத்திடுகிறார்கள்.
பயிற்சி அதிகாரி உஸ்தாத் (யுவன் மயில்சாமி) கீழ், அமிதாப் (ஷபீர் கல்லரக்கல்) உடனான முருகனின் ஆரம்பகால மோதல் பின்னர் நம்பிக்கையாக மாறுகிறது. முதல் கட்டத் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டனர் என்பதை அறிந்து, இரண்டாம் கட்டத் தேர்வாளர்களுடன் தப்பிக்க முயற்சிக்கிறார்.
இதற்கிடையில், சடையன் (அட்டகத்தி தினேஷ்), தனது சொந்த ஊரில் காவல்துறை-நில முதலாளித்துவத்திற்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். தப்பிக்கும் முயற்சி தோல்வியடைய, பயிற்சியாளர்கள் அடையாளம் இடப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். போலியான முகாமின் உண்மை வெளிப்பட்டதா? இல்லையா? கிளைமேக்ஸில் என்ன ஆனது என்கிற சுவாரஸ்யத்துடன் உருவாகியிருக்கிறது இந்த தண்டகாரண்யம் திரைப்படம்.
படம் எப்படி இருக்கு?: முகாமின் செயல்பாடுகள் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பயிற்சி, தண்டனைகள், 8 கி.மீ. ஓட்டம், சமையலறையில் நடக்கும் சண்டைகள் என அனைத்தும் யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தின் பல்வேறு பரிமாணங்கள் பேச்சுக்களின்றி, மொழி மற்றும் உணவுப் பங்கீடு மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.
அட்டகத்தி தினேஷ், கலையரசன், சபீர் கல்லரக்கல் என இந்த படத்துக்கு முக்கிய தூண்களாக இந்த 3 பேரும் உள்ளனர். உண்மைச் சம்பவத்தை தைரியமாக படமாக காட்டிய விதத்தில் இயக்குநர் அதியன் ஆதிரை பாராட்டுகளை அள்ளுகிறார். அட்டகத்தி தினேஷ் பேசக்கூடிய வசனங்கள் பெரும் கவனத்தை பெறுகின்றன. படம் வெளியான பிறகு சமூகத்தில் சில விவாதங்களையும் படம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ்: முருகன்-அமிதாப் இடையேயான உறவு படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்த மோதல்கள், அனுபவித்த வலிகளால் உருவான நம்பிக்கையாக மாறுகிறது. ஷபீர் கல்லரக்கல் சிறிய சைகைகள் மூலம் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார், இது பின்னர் அவர்களின் கூட்டணியை உணர்வுபூர்வமாக்குகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசை முகாமின் காட்சிகளுக்கு உதவுகிறது, நடிகர்களின் நடிப்பு பெரும்பாலும் சிறப்பாக உள்ளது. கலையரசன் பயிற்சி காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அட்டகத்தி தினேஷ் போராளியாக வரும் காட்சிகளும் அவருக்காக போடப்பட்ட பிஜிஎம் என டெக்னிக்கலாகவும் படம் ஸ்ட்ராங்காக உள்ளது.
மைனஸ்: காடு தொடர்பான காட்சிகள் படத்தின் முக்கிய கருவை மங்கலாக்குகின்றன. சடையனின் கொலைகள் நாயகத்தன்மையுடன் காட்டப்படுவது, அரசால் நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு படம் காட்டும் வருத்தத்துடன் ஒத்துப் போகவில்லை. முருகன் மீது நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல் காட்சி பாதியில் கைவிடப்பட்டுள்ளது.
பல முக்கியமான திருப்பங்கள் எந்தவித அழுத்தமும் இன்றி வருகின்றன. முக்கிய தருணங்கள் பெரும்பாலும் சஸ்பென்ஸ் இல்லாமல் காட்டப்படுகின்றன. மேலும், யதார்த்தத்தை வெளிப்படுத்தும் நோக்கில், பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்வதாக உள்ளன. இது சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. சில குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்த தண்டகாரண்யம் படத்தை அனைவரும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











