The Railway Man Review: போபால் விஷ வாயு சம்பவம் இதுதான்... தி ரயில்வே மேன் ஓடிடி விமர்சனம்!
சென்னை: யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள தி ரயில்வே மேன் என்ற வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஷிவ் ராவைல் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில், மாதவன், கே கே மேனன், திவ்யேந்து, பாபில் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1984ல் போபாலில் நடைபெற்ற விஷ வாயு பேரழிவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்.
இந்தி உட்பட பல மொழிகளில் உருவாகியுள்ள தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்ஸின் தமிழ் விமர்சனம் இதோ.
தி ரயில்வே மேன் வெப் சீரிஸ் தமிழ் விமர்சனம்
1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற பெருந்துயரம் உலகையே அதிரச் செய்தது. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷ வாயு, அப்பகுதியில் வசித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இந்தச் சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு உரிமையாளர் வாரன் ஆண்டர்சன் போபால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேறினார்.
அப்போது மிகவும் பரபரப்பாக இருந்த போபால் சம்பவத்தின் தற்போதைய செய்தி வடிவம் இவ்வளவு தான். இதனை முழுமையான வெப் சீரிஸ்ஸாக இயக்கியுள்ளார் ஷிவ் ராவைல். குறிப்பாக யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து கேஸ் லீக்கானது, அப்போது அங்குள்ள மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்ததை உண்மைக்கு மிக நெருக்கமாக கண் முன்னே காட்டியுள்ளார். அதைவிட முக்கியமாக, மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தச் சம்பத்தில் இருந்து உயிர் தப்பியது என்பது தான் தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்ஸின் பிரதான நோக்கமாகும்.
விஷ வாயு வெளியேறும் சில மணி நேரங்களுக்கு முன்பும், அதன் பின்னர் ஒரு நாள் நடந்த சம்பவமும் தான் இந்த வெப் சீரிஸ். கதையின் ஆரம்பத்திலேயே யூனியன் கார்பைடு நிறுவன உரிமையாளர் ஆண்டர்சன் இந்தியாவில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் அந்த ஆலையில் இருக்கும் கெமிக்கலின் நச்சுத்தன்மை குறித்து சில காட்சிகளில் புரிய வைத்துவிட்டு நேராக கதை பயணிக்கிறது.
யூனியன் கார்பைடு ஆலை அருகே ஒரு குடியிருப்பும், இன்னும் பக்கமாக போபால் ரயில்வே ஸ்டேஷனும் இருக்கிறது. ஆலையில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை வெளியே கொண்டுவருவதில் பத்திரிகையாளர் ஒருவர் தீவிரமாக செயல்படுகிறார். அவருக்கு அதே ஆலையில் வேலைப் பார்த்த இளைஞர் ஒருவரும், சூப்பர் வைசர் ஒருவரும் உதவி செய்கின்றனர்.
அப்போதுதான் யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து கேஸ் லீக்காகிறது. ஆனால், அங்கு வேலைப் பார்க்கும் பலருக்கும் உரிய பயிற்சி கொடுக்கப்படவில்லை என்பதால், அவர்களை அங்கிருந்து வெளியே அனுப்புகிறார் கமர்தீன் என்ற சூப்பர் வைசர். பின்னர் அவரே தனது உயிரை பணயம் வைத்து கேஸ் லீக்காவதை ஓரளவு தடுக்கிறார். இதனால் அந்த ஆலை முழுவதுமாக வெடித்துச் சிதறுவது தடுக்கப்படுகிறது
ஆனால், கேஸ் லீக்காக தொடங்கியதுமே ஆலையின் பக்கத்தில் இருக்கும் குடியிருப்பில் இருப்பவர்கள் மூச்சுத் திணறி செத்து மடிகின்றனர். இன்னொரு பக்கம் போபால் ரயில்வே ஸ்டேஷனில் கோராக்பூர் - மும்பை ரயிலுக்காக ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட, அங்கிருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் இஃப்திகார் சித்திக், லோகோ பைலட் இம்மதி ரியாஸ் பயணிகளை காப்பாற்ற போராடுகின்றனர்.
அவர்களுடன் திருடன் ஒருவரும் இணைந்துகொள்ள, மூவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து போராடுகின்றனர். இன்னொரு பக்கம் மேற்கு ரயில்வே ஜென்ரல் மேனேஜர் ரதி பாண்டே (மாதவன்) முதலுதவி செய்து மக்களை மீட்க ஒரு ரயிலையே கிளப்பிக் கொண்டு போபால் செல்கிறார். அப்போது அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க, அதையெல்லாம் கடந்து மக்களுக்காக போபால் செல்கிறார்.
அதேபோல், கோராக்பூர் - மும்பை ரயிலை போபாலுக்குள் வரவிடாமல் தடுக்க பெரும் போராட்டமே நடக்கிறது. அதில் பயணிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்பதில் ஸ்டேஷன் மாஸ்டரும், லோகோ பைலட்டும் உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் சாமர்த்தியத்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்பட்டன. இந்த உண்மைச் சம்பவத்தை அப்படியே கண் முன் காட்டியுள்ளது தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்.
குறிப்பிட்ட அந்த நாளில் போபால் வழியாக செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. அப்படி சென்றிருந்தால் இன்னும் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாகிருக்கும். இந்த பின்னணியை உண்மைக்கு மிக நெருக்கமாக காட்டியுள்ளது இந்த சீரிஸ். முக்கியமாக யூனியன் கார்பைட் ஆலையில் தனது உயிரை தியாகம் செய்து மிகப் பெரிய விபத்தை தடுத்த கமர்தீன் என்பவர் முஸ்லிம். அதேபோல், ரயில்வே மாஸ்டர் இஃப்திகார் சித்திக், லோகோ பைலட் இம்மத் ரியாஸ் இவர்களும் முஸ்லிம்.
போபால் சம்பவத்தில் பல உயிர்களை காப்பாற்றிய இந்த மூன்று பேர் குறித்து அதிகம் பேசப்படவில்லை. அதனை இந்த வெப் சீரிஸ் தீர்த்து வைத்துள்ளது. அதேபோல், போபால் விஷ வாயு தாக்கம் எப்படி இருந்தது என ஒரெயொரு காட்சியின் மூலம் விவரித்திருப்பது நெஞ்சை அப்படியே உறைய வைக்கிறது. உயிரை பணயம் வைத்து பலரை காப்பாற்றிய கமர்தீன் என்பவரின் மகனை காட்டும் சீன் தான் அது. இப்படி பல துயரங்களை ஆங்காங்கே நம்பும்படியாக காட்டியுள்ளனர்.
மாதவன், கே கே மேனன், திவ்யேந்து, பாபில் கான் ஆகியோரின் நடிப்பும், சாம் ஸ்லேட்டரின் பின்னணி இசையும் தி ரயில்வே மேன் வெப் சீரிஸ்க்கு உயிர் கொடுத்துள்ளது. அதேபோல், இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீதான தாக்குதல் குறித்தும், சில காட்சிகளில் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமே 4 எபிசோட்கள் தான் என்றாலும், போபால் துயரத்தை கச்சிதமாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் ஷிவ் ராவைல். நெட்பிளிக்ஸ் ஓடிடி ரசிகர்கள் கண்டிப்பாக தவறவிடக் கூடாத வெப் சீரிஸ் தி ரயில்வே மேன்.


Click it and Unblock the Notifications











