The Rajasaab Review: தி ராஜாசாப் விமர்சனம்.. பணத்தாசை பிடித்த தாத்தா பேய்.. பிரபாஸின் மைண்ட் கேம்!
சென்னை: இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார், சஞ்சய் தத், விடிவி கணேஷ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்க தமன் இசையில் இந்த சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது 'தி ராஜாசாப்'.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி படம் போல இருக்கும் படம் என நினைத்த ரசிகர்களுக்கு சந்திரமுகி 2 ஃபீலிங்கையே இந்த படம் கொடுத்துள்ளது. ஆனால், படத்தை இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கவே முடியாதா? என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.

பிரபாஸ் தனது நடிப்பால் கடைசி வரை ரசிகர்களை பார்க்க வைத்து விடுகிறார். மேலும், கூடுதலாக மாளவிகா மோகனன், நிதி அகர்வாலின் கவர்ச்சியும் ரசிகர்களை கட்டிப்போடுவது உறுதி. தி ராஜாசாப் படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்ட முழுமையான விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..
தி ராஜாசாப் கதை: அல்சைமர் நோயாளியான கங்கம்மா பாட்டி (ஜரினா வாஹாப்) தனது காணாமல் கணவர் கனகராஜுவை (சஞ்சய் தத்) எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க அம்மா, அப்பாவை இழந்து விட்டு பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து வரும் நம்ம ஹீரோ ராஜு (பிரபாஸ்), தாத்தா பற்றிய க்ளூ ஒன்று கிடைக்க அவரை தேடிக் கொண்டு சார்மினாருக்கு வருகிறார்.
ஆனால், அங்கே அவர் கன்னியாஸ்திரியாக மாறப்போகும் பெஸ்ஸியை (நிதி அகர்வால்) பார்த்து காதலில் விழுகிறார். சமுத்திரகனியின் பேத்தியான பைரவி (மாளவிகா மோகனன்) பணப்பெட்டியுடன் பிரபாஸுக்கு உதவ வர அவருக்கும் பிரபாஸை பார்த்ததும் காதல் வருகிறது.
முதல் பாதி முழுக்க காதல் டிராக்கில் செல்ல, 2வது பாதியில் மாளவிகா மோகனன், விடிவி கணேஷ் உடன் தாத்தாவோட பேய் பங்களாவை கண்டுபிடித்து உள்ளே வரும் பிரபாஸ் தாத்தாவின் மைண்ட் கேமில் மாட்டிக் கொள்கிறார். அங்கே இருந்து அவர் எப்படி தப்பித்தார், பாட்டியிடம் தாத்தாவை கூட்டிச் சென்றாரா? தாத்தா ஏன் பேயாக அலைகிறார்? அவருடைய ஆசை என்ன? என்பது தான் தி ராஜாசாப் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு: முதல் பாதி முழுவதுமே ஏகப்பட்ட கிரிஞ்சு காட்சிகளால் படத்தை வீணடித்து விட்டார் இயக்குநர் மாருதி என்று தான் சொல்ல வேண்டும். படம் ஆரம்பிப்பதே இடைவேளைக்கு முன் பிரபாஸ் அவரது தாத்தாவின் பேய் பங்களாவை நடுக்காட்டுக்கு மத்தியில் கண்டுபிடித்து உள்ளே நுழைவதில் இருந்து தான்.
அதுவரை நிதானத்தை இழந்து பார்த்த ரசிகர்களுக்கு, அதன் பின்னர், ஃபிளாஷ்பேக்கில் அருந்ததி கதையும், சந்திரமுகி காசு மாலை, ஒட்டியாணம் காட்சிகளும், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் பேய்க்கு பயப்படுவது போல பிரபாஸ் பயந்து நடுங்கும் காட்சிகளும் ஆறுதல்களாக மாறுகின்றன.
பிச்சைக்காரராக இருக்கும் சஞ்சய் தத் திடீரென சமஸ்தானத்தையே அடைய மந்திரவாதியாக மாறுவதும், அங்கேயே இருந்து சொத்துக்களை வைத்து சுகபோகியாக வாழாமல் அதை திருடிக் கொண்டு செல்வதும், அதன் பின்னர் அம்மு அபிராமியை மெஸ்மரைஸ் செய்து அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இருப்பது ஏன் என்பது பெரிய கேள்வியாகவே எழுகிறது.
தாத்தா தான் பேய் என்பதால், அவர் எப்படி வந்து பயமுறுத்தினாலும், பிரபாஸ் கொஞ்சம் கூட பயப்படாமல் பஞ்ச் வசனம் பேசும் இடங்கள் எல்லாம் ஓவர் டோஸ். ஆனால், கடைசியில் மைண்ட் கேம் வைத்து விளையாடும் இடத்தில் அவரது நடிப்பும், அந்த மருத்துவமனையில் அவரது பர்ஃபார்மன்ஸ் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
பிளஸ்: பிரபாஸ், மாளவிகா மோகனன் இருவரது நடிப்பும் சஞ்சய் தத், பாட்டியாக நடித்த ஜரினா வஹாப்பின் நடிப்பும் படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. மெயின் ஹீரோயினான நிதி அகர்வால் வெறும் கவர்ச்சி பொம்மையாகவே வருகிறார். தமனின் இசை தான் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. பொம்மன் இரானியின் கதாபாத்திரம் படத்துக்கு பெரிய பிளஸ்.
மைனஸ்: மொத்தமாகவே கதை மற்றும் திரைக்கதை வலுவாக இல்லாதது படத்திற்கு பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. இயக்குநர் மாருதி கிளைமேக்ஸில் விளையாடிய மைண்ட் கேமை படம் முழுக்க பயன்படுத்தி இருந்தால், கண்டிப்பாக இது சந்திரமுகி, காஞ்சனா அளவுக்கு பேய் ஹிட் அடித்திருக்கும். ஆனால், பல இடங்களில் கோட்டை விட்டு விட்டார். பிரபாஸ் நடித்த காமெடி அருந்ததி படமாகவே இந்த தி ராஜாசாப் மாறி நிற்கிறது.


Click it and Unblock the Notifications











