Uchakattam Review: ஒரு கொலையும்..சில மர்மங்களும்.. விறுவிறுப்பாக சொல்லும் உச்சக்கட்டம்! விமர்சனம்
ஒரு கொலையால் ஏற்படும் சம்பவங்களின் தொகுப்பு தான் உச்சக்கட்டம் திரைப்படத்தின் கதை.
Recommended Video

சென்னை: ஒரு நட்சத்திர விடுதியில் நடக்கும் கொலையை தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்கள் தான் உச்சக்கட்டம்.
காதலர்களான தாகூர் அனூப் சிங்கும், சாய் தன்ஷிகாவும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு அறையில் ஒரு நபர் கொல்லப்படுகிறார். அதனை சாய் தன்ஷிகா யதர்ச்சையாக வீடியோ எடுத்துவிடுகிறார்.

இதையடுத்து சாய் தன்ஷிகாவை வில்லன் கும்பல் துரத்துகிறது. ஒரு கார் டிக்கியில் ஒளிந்து கொண்டு, அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிறார் அவர். வில்லன் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் தாகூர், தன்யோ ஹோப்பின் உதவியுடன் காதலியை தேடி செல்கிறார். இவர்கள் அனைவரும் குடகு மலை காட்டுப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். வில்லன் கும்பலிடம் தன்ஷிகா மாட்டிக்கொள்கிறார். தன்ஷிகாவை வில்லனிடம் இருந்து தாகூர் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை உச்சக்கட்ட விறுவிறுப்புடன் சொல்கிறது படம்.

ஒரு சின்ன புள்ளியை வைத்து, அழகான கோலம் போட்டிருக்கிறார் சுனில் குமார் தேசாய். கன்னடத்தில் இருந்து டப் செய்யப்பட்ட படம் என்றாலும், சிங்கம் 3 வில்லன் தாகூர், நம்ம கபாலி தன்ஷிகா, அஜித் வில்லன் கபூர் சிங், ஆடுகளம் கிஷோர், தடம் தன்யா ஹோப் என அனைவருமே நாம் பார்த்த முகம் என்பதால், டப்பிங் படம் பார்க்கும் உணர்வு ஏற்படவில்லை.
முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஹீரோ, வில்லன், ஸ்டன்ட்மேன் என படத்தில் வரும் அனைவருமே ராட்சசன் உருவத்தில் இருக்கிறார்கள். ஏதோ கிம்முக்குள் போய்விட்டு வெளியே வந்தது போல் போன்ற உணர்வு தான் முதலில் ஏற்படுகிறது. இதனால் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் மிக பிரமாண்டமாக இருக்கிறது.

சிங்கம் 3 படத்தில் நடித்த தாகூர் அனூப் சிங் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். நடிப்பதற்கு சிரமப்பட்டிருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.
நிறைய ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் சாய் தன்ஷிகா. க்ளைமாக்ஸ் காட்சியில் பெரிய கட்டடத்தில் இருந்து கோணிப்பையை கட்டிக்கொண்டு இறங்கும் காட்சியில், டூப் போடாமல் நடித்து அப்லாஸ் வாங்குகிறார்.

ஒரு சில காட்சிகள் வந்தாலும், அதிகமாக ஸ்கோர் செய்கிறார் ஆடுகளம் கிஷோர். தடம் தன்யா ஹோப், வம்சி, கபூர் சிங், ஷ்ரத்தா தாஸ் என படத்தில் வரும் அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்களுக்கு வேலையில்லை. பின்னணி இசையில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் சஞ்ஜோய் சவுத்திரி. ராஜன் மற்றும் விஷ்ணு வர்தனின் ஒளிப்பதிவு படத்திற்கு உறுதுணையாக உள்ளது. கெம்பராஜுவின் படத்தொகுப்பு விறுவிறுப்பாக இருக்கிறது.

படத்தின் பலம் திரைக்கதை தான். ஆனால் காட்சியமைப்பு மிகவும் செயற்கையாக உள்ளது. நடிகர்களும் செயற்கையாகவே தெரிகிறார்கள். திரைக்கதையில் காட்டிய அக்கறையை, காட்சியமைப்பிலும் காட்டியிருக்கலாம்.
கன்னட சினிமாவின் அடுத்தக்கட்டம், இந்த உச்சக்கட்டம்.


Click it and Unblock the Notifications











