வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - விமர்சனம்

By Shankar

Rating:
2.5/5
-எஸ் ஷங்கர்

நடிப்பு: சந்தானம், அஸ்னா ஜவேரி, நகிநீடு, ரவிபிரகாஷ், விடிவி கணேஷ்
இசை: சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு: சக்தி & ரிச்சர்ட் எம் நாதன்
தயாரிப்பு: பிவிபி சினிமாஸ்
இயக்கம்: ஸ்ரீநாத்

இந்தப் படத்துக்கான விமர்சன முன்னோட்டமாகத்தான் நேற்று 'காமெடியன்கள் ஹீரோக்கள் ஆகலாம்... ஆனால்!' என்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

சந்தானம் ஹீரோவானதில் எந்தத் தவறும் இல்லை. சொல்லப் போனால் அவர் இந்தப் படத்துக்காகவே தன்னைப் பாலீஷ் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் உடலுக்குப் போட்ட பாலீஷில், அவரது காமெடி பளபளப்பு காணாமல் போயிருப்பதுதான் சோகம்.

தெலுங்கில் பெரிய ஹிட்டான மரியாதை ராமண்ணாவை வபுஆ-வாக தமிழாக்கியிருக்கிறார்கள்.

வழக்கமான தெலுங்கு சினிமாக்களின் விதியிலிருந்து இம்மியும் விலகாத கதை. தாய் தந்தை இல்லாத சந்தானம், தன் சொந்த ஊருக்குப் போய், அப்பாவின் பூர்வீக நிலத்தை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சென்னையில் பிழைக்கலாம் என முடிவு செய்து கிளம்புகிறார். ரயிலில் ஹீரோயின் ஆஸ்னா ஜவேரியைச் சந்திக்கிறார். இருவரும் ஒரே ஊருக்குப் போவது தெரிந்து சினேகமாகிறார்கள். ஒரு டூயட் வேறு பாடுகிறார்கள்.

ஊரில் கால் வைத்ததும் சந்தானத்தை குடும்பப் பகை துரத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன் சந்தானத்தின் அப்பா போஸ் வெங்கட், தன் மைத்துனரின் தம்பியைக் கொன்றுவிடுகிறார். மைத்துனரோ ஊரில் பெரிய மனிதர். அவரும் அவர் வாரிசுகளும் இந்த கொலைக்குப் பழிவாங்கக் காத்திருக்கின்றனர். இதெல்லாம் தெரியாமல், தன்னைக் கொல்லத் துடிக்கும் குடும்பத்துக்குள் நுழைகிறார் சந்தானம். ரயிலில் சந்தித்த ஆஸ்னா அந்தக் குடும்பத்துப் பெண் என்பது அப்போதுதான் தெரிகிறது.

ஆனால் தாங்கள் பழிவாங்கத் தேடிக் கொண்டிருக்கும் குடும்ப வாரிசுதான் சந்தானம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆஸ்னாவின் அப்பாவும், அண்ணன்களும் கொலைவெறியோடு சந்தானத்தை நெருங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிற்குள் நுழைந்த ஒருவரை, வீட்டில் வைத்து கொலை செய்வதில்லை என்பதால், அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி கொல்லத் துடிக்கிறார்கள்.

விஷயம் புரிந்த சந்தானம், அப்படி அந்த வீட்டுக்குள்ளேயே இருந்து உயிர்தப்புகிறார்... கடைசியில் வெளியேறுகிறார்.. ஆஸ்னாவைக் கைப்பிடிக்கிறாரா? என்பது க்ளைமாக்ஸ்.

ஹீரோ என்ற உடனே, மனசுக்குள் ரஜினியை ஜெபிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் சந்தானம் போன்றவர்கள். அதே உடல் மொழியோடு, ஒரு அதிரடி ஆரம்பப் பாட்டோடு படத்தில் அறிமுகமாகிறார் சந்தானம். படம் முழுக்க அவர்தான். ஒரு முழுமையான ஹீரோ செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும் செய்கிறார். ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு அவர் செய்யும் சாகசங்கள், கொஞ்சமல்ல.. டூ டூ மச்!

Vallavanukku Pullum Aayutham Review

நல்ல வேளை க்ளைமாக்ஸில் அதிரடியாக சண்டையெல்லாம் போடவில்லை சந்தானம். நம்ப முடிகிறதோ இல்லை... ஆனால் சுவாரஸ்மான க்ளைமாக்ஸ், குறிப்பாக அந்த லொகேஷன்.

ஹீரோயினாக வரும் ஆஸ்னா ஜவேரி சூப்பரான அழகியொன்றுமில்லை. ரயில்களில் எதேச்சையாக சந்திக்கும் இயல்பான பெண்தான். நடிப்பிலும் குறை சொல்ல முடியாது.

ஊர்ப் பெரிய மனிதராக வரும் நகிநீடு, அவரது மகன்களாக வருபவர்கள், விடிவி கணேஷ், மாஸ்டர் தினேஷ் என அத்தனை பேரும் ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தை நினைவூட்டுகிறார்கள்.

வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க சந்தானம் செய்யும் தந்திரங்களை இன்னும் கூட புத்திசாலித்தனமாக, நகைச்சுவையாகச் சொல்லியிருக்கலாம்.

ராஜகுமாரன், பவர் ஸ்டார் சீனிவாசன் போன்றவர்களை ஓரிரு காட்சிகளுக்கு சந்தானம் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவர்கள் செய்வதும் அப்படியொன்றும் பெரிய காமெடியாக இல்லை.

சித்தார்த் விபினின் இசை பரவாயில்லை. சக்தி - ரிச்சர்டு எம் நாதன் என இரு ஒளிப்பதிவாளர்கள். அந்த கிராமத்து வீடு, அதன் பின்னணியை காட்டிய விதம் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த வீடு மட்டும் கிராமத்திலிருந்து ஒதுங்கி ஏதோ பொட்டல் வெளியில் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பதுதான் ஒட்டவில்லை.

இயக்குநராக களமிறங்கியிருக்கும் ஸ்ரீநாத் ஜஸ்ட் பாஸ் எனும் அளவுக்குதான் இந்தப் படம் வந்திருக்கிறது.

'உங்க காமெடிக்கு சிரிப்பே வரல.. ஆனா மனசு கஷ்டப்பட கூடாதேன்னு சிரிச்சி வைச்சேன்...' - இது செந்தில் குமாரிடம் சந்தானம் சொல்லும் வசனம்.

பெரும்பாலான பார்வையாளர்கள் சந்தானத்தில் சொல்ல நினைக்கும் வசனமும் இதுதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X