sengalam review : கொலை? அரசியல்? அதிரடி திரில்லர் ஜானர்..செங்களம் முதல் எபிசோடு எப்படி இருக்கு?
நடிகர்கள் : வாணி போஜன், கலையரசன்,
இயக்குனர் : எஸ்.ஆர்.பிரபாகரன்
சென்னை : ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ள புதிய வெப் தொடர்தான் செங்களம்.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ள இந்த வெப் தொடரில் வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், பவன், பிரேம், கஜராஜ், மற்றும் பூஜா வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
செங்களம் வெப் தொடர்
செங்களம் வெப் தொடர் பெயருக்கு ஏற்றது போல இயக்குநர் பிரபாகரனின் சிவப்பு களமாகவே உள்ளது. இந்த தொடருக்கு தரன் இசையமைத்துள்ளார். அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த வெப் தொடர் 9 எபிசோடுகளை கொண்ட தொடராகும். இதில், இன்று முதல் எபிசோடு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஆரம்பமே மிரட்டல்
ஆள் நடமாட்டமே இல்லாத காடு, திகிலூட்டும் இசை என முதல் எபிசோடின் ஆரம்பமே சும்மா அட்டகாசமாக உள்ளது. இரண்டு கொலைகளை செய்துவிட்டு, மூன்றாவது கொலை செய்ய நேரம் பார்த்து காட்டில் பதுங்கி வாழும் தனது மூன்று மகன்களுக்கு சோத்து மூட்டையுடன் வேலாயி (விஜி சந்திரசேகர்) ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் மகன்களை தேடி அலைகிறார். அவருடன் துணைக்கு எலும்பும் தோலுமாக நாய் ஒன்று செல்கிறது. கலையரசன், டேனியல், பவன் மூவரும் வஞ்சத்தை தீர்க்க கொலைவெறியுடன் காத்திருக்கிறார்.
கொலைவெறியுடன்
இவர்கள் மூவரையும் போலீஸ் ஒருபுறம் வலைவீசித் தேடி அலைய, இவர்கள் அடுத்த கொலையை செய்ய காட்டில் இருந்து திட்டம்போடுகிறார்கள். இவர்கள் மூவரும் யார்... எதற்காக கொலை செய்தார்கள் என்பது அடுத்து வரும் எபிசோடில் விரிவாக பார்க்கலாம். வழக்கமாக ஹீரோவோவுக்கு அடியாளாக வரும் கலையரசன்,முறுக்கு மீசை, தாடி, மடித்து கட்டிய வேட்டி என பட்டையை கிளப்பி உள்ளார்.
தடபுடலான திருமணம்
இது ஒருபுறம் இருக்க, மரியாதை மிக்க சத்தியமூர்த்தி குடும்பத்தின் வாரிசான ராஜமாணிக்கத்திற்கு திருமண ஏற்பாடு தடபுலாக நடந்து வருகிறது. ராஜமாணிக்கத்தின் மனைவி இறந்த பிறகு, திருமணமே செய்யாமல் பல ஆண்டுகளான தனிமரமாக இருந்த ராஜமாணிக்கம் பணக்கார தொழிலதிபரின் மகளான சூர்யகலாவை (வாணி போஜன்) திருமணம் செய்கிறார்.
கழுகு போல சுற்றும் அரசியல் கட்சிகள்
கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக எந்த கட்சியிலும் சேராமல், தனது கிராம மக்களுக்கு பல நன்மைகளை செய்து மனதில் இடம் பிடித்து இருக்கும் சத்தியமூர்த்தி குடும்ப கௌரவத்தையும், மக்களுக்கு அவர் மீது இருக்கும் நம்பிக்கையும் கெடுக்க நினைத்து பல அரசியல் கட்சிகள், அந்த கிராமத்தை கழுகு போல சுற்றி வருகின்றன. இனி பல சுவாரசியமான பல திருப்பங்களுடன் செங்களம் வெப் தொடரின் அடுத்த எபிசோடுகளை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











