இது வெறும் கதையும் இல்ல... விதி செய்த சதியும் இல்ல... 'வன்முறைப்பகுதி' விமர்சனம்!
எளிய கிராமத்து மனிதர்கள் சொல்லும் மிக அழுத்தமான கதை வன்முறைப்பகுதி.
Recommended Video

சென்னை: முன் கோபத்தால் அழியும் கிராமத்து சண்டியர்களை பற்றிய படம் தான் வன்முறைப்பகுதி.
தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்கள் தான் கதையின் களம். கரட்டுப்பட்டு கிராமத்தில் சண்டித்தனம் செய்து வெட்டியாக ஊர் சுற்றித்திரியும் முனிசாமி (மணிகண்டன் ) யாருக்கும் அடங்காத முரட்டுக்காளை. இவருடைய முரட்டுதனத்தாலேயே உள்ளூரில் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். இதனால் வீரய்யனூரை சேர்ந்த தவமணியுடன் (ரபியா ஜாபர்) முனிசாமிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. இவரும் காதலிக்க தொடங்கும் நேரத்தில், முனிசாமியின் முரட்டு சுபாவம் பற்றி பெண் வீட்டாருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து திருமணம் தடைபட, பிரச்சினை பெரிதாகிறது. முனுசாமிக்கும், தவமணிக்கும் திருமணம் நடந்ததா? முனுசாமியின் கோபம் அவரை எந்த எல்லைக்கு கொண்டு சென்றது என்பதே படம்.

என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண், பருத்திவீரன், கொம்பன் கார்த்தி என நாம் பலமுறை பார்த்து பழகிய கிராமத்து சண்டியர் கதை தான். ஆனால் சினிமாதனம் இல்லாமல், யதார்த்தமாக இந்த படத்தை எடுத்த வகையில் கவனம் ஈர்க்கிறார் புதுமுக இயக்குனர் நாகா (நாகராஜ்).
எளிய கிராமத்து மனிதர்களை வைத்தே அனைத்து கதாபாத்திரங்களையும் படைத்திருக்கிறார் இயக்குனர். மேக்கப் இல்லாமல் வெளிவந்துள்ள அவர்களின் நடிப்பை இயற்கையாக பதிவு செய்திருக்கிறார். படம் பார்க்கும் போது, ஏதோ ஒரு கிராமத்துக்குள் சென்ற உணர்வு ஏற்படுகிறது.
நாம் மறந்து போன கிராமத்துக் கலாச்சாரத்தை சீரான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் நாகா. எந்த இடத்திலும் போரடிக்காமல் பயணிக்கிறது படம்.

படத்தில் நடித்துள்ளவர்களை நடிகர்கள் என ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது. அந்த கிராமத்து மனிதர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தங்கையின் வாழ்வை நினைத்து புலம்பும் அந்த தாய்மாமன் கதாபாத்திரம் அத்தனை இயல்பு. ஹீரோ மணிகண்டன், ஹீரோயின் ரபியா உள்பட அனைவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் மூன்று பாடல்கள் இருக்கின்றன. ஆனால் எதுவும் எழுந்துபோக வைக்கவில்லை. ஒளிப்பதிவாளர் டி.மகேஷ் மற்றும் எடிட்டர் அனந்த லிங்ககுமார் ஆகியோர் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப வேலை செய்திருக்கிறார்கள்.

இதுபோன்ற சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது, ஒவ்வொரு சினிமா ரசிகனின் கடமை.


Click it and Unblock the Notifications











