Veera Dheera Sooran Review: வீர தீர சூரன் விமர்சனம்! கம்பேக் கொடுத்தாரா விக்ரம்? படம் எப்படி இருக்கு?
சென்னை: அருண் குமார் இயக்கத்தில் உருவாகி இன்று அதாவது மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வீர தீர சூரன் பாகம் 2. விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியானது. ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பின்னர் ரிலீஸ் ஆனது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
படத்தின் முதல் பாகம் வெளியே வராமல், நேரடியாக இரண்டாம் பாகம் ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதாலே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் தொடங்கி முதல் காட்சியில் இருந்து கதை தொடங்கினாலும் இரண்டாவது காட்சியிலேயே படம் உடனே அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சூடு பிடிக்கத் தொடங்கிவிடுகிறது. மிகப்பெரிய ரவுடிகளாக இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அவரது அப்பாவை பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரே இரவில் என்கவுண்டர் போட திட்டம் போடும் காவல் அதிகாரி அருணகிரியாக எஸ்.ஜே. சூர்யா இருக்கிறார். தனது மகன் சுராஜ் வெஞ்சரமூடுவைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார் அப்பாவான ப்ருத்விராஜ். தனது மகன் கண்ணனை ( சுராஜ் வெஞ்சரமூடு) காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த இரவை கடக்க வேண்டும்.
விடிவதற்குள் அருணகிரியிடம் மாட்டிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அருணகிரியை கொல்ல, ஏற்கனவே இவர்களிடம் அடியாளாக வேலை செய்துவிட்டு, இப்போது ஒதுங்கியுள்ள காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் ரவி (ப்ருத்விராஜ்). சிறியதாக மளிகைக் கடை வைத்துள்ள காளி, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ரவி கேட்கும் உதவிக்கு ஒப்புக் கொண்டாலும், ஒரு கட்டத்தில் அருணகிரி மற்றும் ரவி என இருவருக்கும் இடையில் மாட்டிக் கொள்கிறார் காளி. இருவரும் காளியின் குடும்பத்தை வைத்து மிரட்டி காய்களை நகர்த்தி வருகிறார்கள். இறுதியில் யார் யாரைக் கொன்றார்கள், யார் உயிருடன் இருக்கிறார், யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதே மீதிக் கதையாக உள்ளது.

திரைக்கதை: படத்தின் கதை பழைய பகையும் பழிவாங்குதலும் என்றாலும், திரைக்கதையில் பிரமாதப்படுத்தி உள்ளார் அருண்குமார். நேரடியாக இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளதால், ரசிகர்களுக்கு எந்த ஒரு காட்சியிலும் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மொத்த திரைக்கதையும் ஒரே இரவில் இருப்பது என்பது சிறப்பு. இரண்டாவது காட்சியிலேயே எஸ்.ஜே. சூர்யா வந்துவிடுகிறார். அதில் இருந்தே திரைக்கதை சூடு பிடிக்கத் தொடங்கிவிடுகிறது. ரவி மற்றும் அருணகிரிக்கு இடையில் மாட்டிக் கொண்டு தனது குடும்பத்தைக் காப்பாற்ற போராடுகிறான் காளி. காட்சிக்கு காட்சி நேர்த்தி, திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் மிகவும் வலுவான மற்றும் கூர்மையான வசனங்கள், எதார்த்த காட்சிகள் என மொத்த படத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியதற்கு பாராட்டுகள்.
சண்டைக் காட்சிகள்: விக்ரமிற்கு ஒரு முன் கதை சொல்லப்படுகிறது, அந்த முன் கதையை சரியான தருணத்தில் காட்சியாக வைத்த இடம் பிரமாதம். கலைவாணியான துஷாரா விஜயன் மற்றும் காளியின் திருமண காட்சிகள் எல்லாம் சிறப்போ சிறப்பு. எஸ்.ஜே. சூர்யாவைக் கொல்ல விக்ரம் போடும் திட்டம், அதை செயல்படுத்த முயற்சிக்கும்போது எல்லாம், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் தியேட்டரே வெடிக்கும் அளவுக்கு இருந்தது. காளி, அருணகிரி, கண்ணன் மற்றும் ரவியின் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்த தேவையில்லாத சண்டைக் காட்சிகள் என எதுவும் இல்லாமல், படத்தின் ப்ரீ க்ளைமேக்ஸில் ஒரு சண்டை மற்றும் க்ளைமேக்ஸில் ஒரு சண்டைக் காட்சி என படத்தை நிறைவாக முடித்துள்ளார் இயக்குநர். கிளைமாக்ஸ் சண்டையில் வரும் 'மதுரை வீரன் தானே' பாடல் எல்லாம் சியான் ரசிகர்களுக்கு விருந்து.

நடிப்பு: படம் முழுவதும் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ப்ரித்விராஜே அதிகம் வருகிறார்கள். இவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிக்கிறார்கள். பழைய பகைக்கு பழி தீர்க்கும் காவல் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மற்றவர்களிடம் இருந்து தனித்தும் உயர்ந்தும் நிற்கிறது. துஷாரா விஜயன் சில காட்சிகளே வந்தாலும் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்துள்ளார்.

செஞ்சுரி: இயக்கத்தில் அருண்குமார் செஞ்சுரி அடித்தால், ஒளிப்பதிவில் தேனி ஈஸ்வர் தனது பங்கிற்கு செஞ்சரி அடிக்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் சிறப்பாக உள்ளதால் தான் தனித்து தெரிய வேண்டும் என படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசையில் டபுள் செஞ்சுரி அடித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். குடும்பத்தை காக்க வீர தீர சூரனாக மாறும் காளி, ரசிகர்கள் மனதையும் சூரையாட தகுதியானவன்.


Click it and Unblock the Notifications











