வீரமும், ஈரமும் - விமர்சனம்

இசை - யுகேந்திரன்
ஒளிப்பதிவு - லியோ.டி
இயக்கம், தயாரிப்பு- சஞ்சய்ராம்.
இரண்டு குடும்பங்களின் பகையால் ஊரே இரண்டு பட்டு அப்பாவி மக்கள் அச்சத்தில் வாழும் வழக்கமான வன்முறைக் கதைதான் வீரமும் ஈரமும். முதல் பாதியில் வீரம் என்ற பெயரில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பனங்காயை வெட்டுவது மாதிரி சீவித் தள்ளுகிறார்கள்.
மறுபாதியில் ஈரம் என்ற பெயரில் ரொம்பத்தான் நெஞ்சை தடவித் தள்ளுகிறார்கள்.
சங்கரன் (சரவணன்) மீது அந்த ஊருக்கே பயம் கலந்த மரியாதை. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்யும் நாயகன். சங்கரனின் பரம விரோதி செம்மறி (சஞ்சய்ராஜ்).
அவன் மீதும் ஊர்க்காரர்களுக்குப் பயம். காரணம் அவன் மோசமானவன். யாரை எப்போது வெட்டுவான் என்பது அவனுக்கே தெரியாது. சங்கரனை போட்டுத் தள்ளுவதுதான் இவனது ஒரே லட்சியம்.
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தப் பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் சங்கரன். ஆனால் தொடர்ந்து ரத்தப் பலிகள் கேட்கிறான் செம்மறி.
மாவட்ட எஸ்.பி.யே முயன்றும்கூட இந்த மோதல்களும் உயிர்ப் பலிகளும் நின் றபாடில்லை. ஒரு கட்டத்தில் செம்மறியுடன் சமாதானமாகப் போக நாள் குறிக்கிறார் சங்கரன். ஆனால் செம்மறி இதற்கு ஒத்துப் போகாததால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறான்.
ஆனால் இந்தக் கொலைப் பழி தன் மேல் வந்துவிடுமே, ஊர் வெட்டிக் கொண்டு சாகுமே என்று அஞ்சி சங்கரன் தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார்.
நல்ல கதைதான், ஆனால் சொன்ன விதம் இடிக்கிறது. கதாநாயகன் சரவணனனுக்கு பொருத்தமான வேடம். நன்கு செய்திருக்கிறார். தீபன் சக்கரவர்த்தி நடிப்பு பக்குவம். ஆனால் இவர்களைத் தவிர மற்றவர்கள் ஓவர் ஆக்ட் செய்து கடுப்பேற்றுகிறார்கள்.
முதல் படம், நல்ல இசைக்காக இன்னும் கூட மெனக்கெட்டிருக்கலாம் யுகேந்திரன்.
படம் முழுக்க ஏதோ கசாப்புக் கடையில் ஆடு வெட்டுவதைப் போல் மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். இடையிடையே காதல், குடும்பம், பாசம் என்று கொஞ்சம் ஈரத்தையும் காட்டுகிறார்கள்.
என்ன பிரயோஜனம்? படம் முடிந்த பிறகும் கூட ரத்தவாடை தொடர்வதைப் போல ஒரு பிரமை. வீரம், ஈரம் இரண்டுக்குமே இந்தப் படத்தில் ஒரே குறியீடுதான்... அது ரத்தம்!


Click it and Unblock the Notifications











