Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
Viswasam review “இஞ்சார்றா.. தூக்குதுரைக்கு பொண்டாட்டி, புள்ள மேல எவ்ளோ பாசம்னு!
மகளுக்காக உருகும் அப்பாவைப் பற்றிய படம் தான் அஜித்தின் விஸ்வாசம்.
Recommended Video
மகளைக் காக்க பாடுபடும் அப்பா பற்றிய கதைதான் விஸ்வாசம் படத்தின் கரு. இதில், காதல், காமெடி, செண்டிமெண்ட், அடிதடி என அஜித் ரசிகர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தேவையான அளவு சேர்த்து படமாக்கி இருக்கிறார் சிவா.
தூக்கு துரையாக அஜித். ஊரே அவர் பேச்சை கேட்குமளவிற்கு முக்கியமான தலை. ஆனால், மனைவி இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஊரில் திருவிழா வருகிறது. அதற்காக மனைவி நிரஞ்சனாவைத் தேடி மும்பைக்கு பயணம் ஆகிறார் அஜித். அந்த பயணம் அவருக்கும், நமக்கும் போரடிக்காமல் இருக்க, அவரது இளமையான பிளாஷ்பேக் காட்சிகளாக விரிகிறது.
அடிதடி அலப்பறைகள் செய்து கொண்டு ரூட்டு தலயாக ஊரில் வலம் வருகிறார் அஜித். மருத்துவ முகாமிற்கு வரும் நயனுக்கும் அவருக்கும் மோதல், பின் வழக்கம் போல் காதலாகிறது. காதலை நீண்ட நாட்கள் கடத்தாமல், அடுத்த கட்டத்திற்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. அழகாக சென்று கொண்டிருக்கும் அவர்களது வாழ்வில், மகளின் உயிருக்கு மிரட்டலாக ஒரு புயல் வீசுகிறது. கணவரின் முரட்டுகுணமே மகளுக்கு எமனாகி விடுமோ என பயப்படும் நயன், குழந்தையுடன் சொந்த ஊரான மும்பைக்கு சென்று விடுகிறார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியையும், மகளையும் பிரிந்திருக்கும் அஜித், மீண்டும் அவர்களைச் சந்திக்கிறார். ஆனால் அப்போதும் மனம் மாறாத நயன், அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். மீண்டும் மகளின் உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. அஜித்தின் மகளைக் கொல்ல துடிப்பவர்கள் யார்? ஏன்? அவர்களுக்கும் அஜித்துக்கும் என்ன விரோதம்? அவர்களிடமிருந்து தன் மகளை அஜித் காப்பாற்றினாரா? மனைவியும், மகளும் மீண்டும் அவர்களுடன் இணைந்தார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
வீரத்தில் அண்ணன், தம்பி பாசம், வேதாளத்தில் அண்ணன் -தங்கை பாசம், விவேகத்தில் கணவன் -மனைவி பாசம் தான் கதைக்களம். அந்தவரிசையில், இதில் அப்பா - மகள் பாசம் தான் கதைக்களம். ஏற்கனவே வில்லன் டீமிடம் இருந்து மகளைக் காப்பாற்றும் போலீஸ் அப்பாவாக அஜித்தை என்னை அறிந்தால் படத்தில் பார்த்திருந்தாலும், அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இதில் கிராமத்து வெள்ளந்தி அப்பாவாக மனதில் இடம் பிடிக்கிறார்.
மதுரை ஸ்லாங்கில் அஜித்தின் பேச்சு ரசிக்க வைக்கிறது. வயதான தோற்றத்தைவிட, பிளாஷ்பேக்கில் வரும் இளமையான லுக்கில் இன்னும் அழகாக இருக்கிறார். ஏற்கனவே வேட்டி கட்டிய அஜித்தை பார்த்திருந்தாலும், தூக்கு துரையின் பாடி லாங்குவேஜ் வேற லெவலில் இருக்கிறது. ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகிபாபு மற்றும் விவேக் என கலந்து கட்டி காமெடி செய்திருக்கிறார். படத்தில் அவர் பேசும் ஆங்கிலத்திற்கு தியேட்டரே அடிமை ஆகிறது.
முதல் பாதியில் ஒரு மாதிரி இளமையான காதல் ரவுசு என்றால், பின்பாதியில் மனைவியை காதலிப்பது வேறொரு ரகம். இரண்டையும் தனக்கே உரிய ஸ்டைலில் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் அஜித். பின்பாதியில் மகளின் பாசத்திற்காக ஏங்கும் அப்பாவாக நம் கண்களைக் கலங்க வைக்கிறார். நிச்சயம் தூக்குதுரையும், அவரது மகளும் வரும் காட்சிகள் பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மறக்க முடியாதவையாக இருக்கும்.
தனி நாயகியாக நடித்துக் கொண்டிருந்த நயன், இப்படத்தில் மீண்டும் காதல் நாயகியாக மாறி இருக்கிறார். ஆனாலும், நல்ல மருத்துவராக, காதலியாக, மகளுக்காக உருகும் அம்மாவாக என நடிப்பில் பல்வேறு பரிணாமங்களைக் காட்டி கிடைத்த காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் ஆச்சே, சும்மாவே ஆடுவார், இதில் காலில் சலங்கை கட்டி விட்டால் கேட்கவா வேண்டும்.
ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்த அனிகா தான் மீண்டும் இதில் அஜித் மகளாக நடித்திருக்கிறார். பயம், ஆர்வம், கோபம், கவலை என அனைத்தையும் சரியான இடத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இமானின் இசை படத்திற்கு மற்றொரு பலம். பாடல்களில் காதுகளை குளிரச் செய்கிறார். பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை. வேட்டி கட்டு பாடல் அடாவடி என்றால், கண்ணான கண்ணே மெலடி.
கிராமத்து அழகை அப்படியே தன் கேமராவுக்குள் பிடித்துக் கட்டிப் போட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் அந்த திருவிழாக் காட்சிகள் நம் கண்களுக்கு நிஜமாகவே வண்ணமயமாக இருக்கிறது. கிராமத்து அழகைக் காட்டிய விதத்திற்கு சற்றும் சளைக்காமல், மும்பையின் ஜன நெரிசலையும் பதிவு செய்திருக்கிறார். ரூபனின் எடிட்டிங் கச்சிதம்.
டீசண்டான வில்லனாக ஜெகபதிபாபு. கோபமும் மிரட்டலும் என தனக்கு தரப்பட்ட வேலையை மிரட்டலாகச் செய்திருக்கிறார்.
காட்சிகளை ஜவ்வு போல் இழுக்காமல், சட்டென மெயின் கதைக்குள் நுழையும் திரைக்கதைக்கு ஒரு சபாஷ். நல்ல குடும்பக் கதையை தேர்ந்தெடுத்து அதில் தேவையான அளவு காதல், காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் கலந்து, தேவைப்படும் இடங்களில் பாடல்களைத் தூவி கமகமக்கும் விருந்தாக கொடுத்திருக்கிறார் சிவா. நல்லக் குடும்பக் கதையை குடும்பத்தோடு நிம்மதியாக பார்க்கும் வகையில் ஆபாசமோ, அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல் படமாகத் தந்திருப்பதற்காகவே சிவாவை நிச்சயம் பாராட்டலாம்.