Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Writer Movie Review : சமுத்திரகனி நடித்த ரைட்டர் படம் எப்படி இருக்கு ?
நடிகர்கள் :
சமுத்திரகனி
ஹரி
இனியா
மகேஸ்வரி
இயக்குனர் :பிரான்க்லின் ஜேக்கப்
சென்னை: பா ரஞ்சித் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிப்பில், பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ரைடர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
காவல்துறை சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 2021 இந்த ஆண்டு காவல்துறையை அதன் அதிகாரத்தை அதிகாரத்திற்குள் இருக்கும் பல பிரச்சனைகளையும் திரைக்கதை மூலம் வெவ்வேறு கோணத்தில் தமிழ் சினிமா மிகவும் அற்புதமாக பதிவு செய்துள்ளது.
Recommended Video
அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் வந்த ரைடர் திரைப்படம் மிக மிக முக்கியமான இந்திய சினிமாவின் ஒரு நோட்வர்த்தி படமாகத்தான் பார்க்கப்படுகிறது.ஜாதி ரீதியான பிரச்சனை, அடித்தட்டு மக்களின் போராட்டம், விளிம்பு நிலையில் வாழும் மனிதனின் ஏக்கங்கள் போன்ற பல காட்சிகள் பா ரஞ்சித் இயக்கத்திலும் தயாரிப்பதிலும் வருவது புதிதல்ல. ஆனாலும் கூட சமூகத்திற்கு சொல்ல வேண்டிய மிக முக்கியமான கடமையை சிறப்பாகவே செய்துள்ளது ரைடர் திரைப்படம்.
தொந்தியும் தொப்பையுமாக
நீண்ட காலமாக ஒரு காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் சமுத்திரக்கனி ரிட்டயர்மென்ட் நோக்கி பயணிக்கிறார். இரண்டு மனைவிகள் அதிலிருக்கும் குடும்ப சிக்கல்கள் என்று ஒருபுறம் இருக்க அதையும் சமாளித்து தனது ரைட்டர் பணியையும் இன்னொரு பக்கம் தோளில் சுமந்து கொண்டு 58 வயது சீனியர் அதிகாரியாக தொந்தியும் தொப்பையுமாக படம் முழுக்க நடை உடை பாவனையில் மிகப்பெரிய மெனகெடுதலை கொடுத்து கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
அதிகாரிகளுக்கு அடிபணிவது
ரைட்டர் தங்கராஜ்( சமுத்திரகனி) என்னும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் படம் முழுக்க நம் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு முறையும் தங்கராஜ் என்று யாராவது கூப்பிடும் பொழுது (சமுத்திரகனி) தங்கராஜ் திரும்பிப் பார்ப்பதும், புருவத்தை உயர்த்தும் பொழுதும், பயந்து கொள்வதும், தயங்குவதும், மேல் அதிகாரிகளுக்கு அடிபணிவதும், அத்தனையும் சரிவர செய்து ஒரு ரைட்டர்யுடைய கடமை என்ன? எப்படிப்பட்ட வாழ்நாள் தொழில் அது என்று நம் மனதில் மிகவும் ஆழமான பல கேள்விகளை எழ செய்கிறது இந்த தங்கராஜ் கதாபாத்திரம்.
புரியாத புதிராகவே
ரைட்டர் படத்தின் முதல் பாதியில் சமுத்திரகனியும் தனது இரண்டு மனைவிகள் குடும்ப வாழ்க்கை என்று காட்சிகள் மெதுவாக நகர்கிறது. முதல் மனைவி அமுதாவாக (லிசி ஆண்டனியும்), இரண்டாம் மனைவி சுபாவாக நடிகை மகேஸ்வரியும் நடித்திருக்கிறார்கள். மகேஸ்வரிக்கு கூடுதல் டயலாக்ஸ் இருக்கிறது, இருப்பினும் முதல் மனைவி அமுதாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் அழுத்தம் ஜாஸ்தி. சம்பந்தமே இல்லாமல் திடீரென்று போலீசிடம் மாட்டிக் கொள்ளும் தேவகுமார் (ஹரி) பல இன்னல்களை சந்திக்கிறார். தான் எதற்காக பிடிபட்டு இருக்கிறோம் இதற்காக காவல்துறை பல வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் முறைகளை கையாளுகிறார்கள், காவல் நிலையத்தில் விசாரிக்காமல் ஒரு விடுதியில் வைத்து ஏன் விசாரிக்கிறார்கள் என்ற பல குழப்பத்துடன் தேவகுமார் என்னும் அந்த கதாபாத்திரம் புரியாத புதிராகவே இருக்கிறது. முதல் பாதியில் இருக்கும் இப்படிப்பட்ட பல புதிர்களுக்கு விடை அளிக்கும் வகையில் இரண்டாம் பாதியில் பல முடிச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படுகிறது.
குபீரென்ற சிரிப்பை
முதல் பாதியில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் அதை பொறுமையாக பார்த்து சமாளித்து விட்டால் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு காட்சியும் நம்மை ஆச்சரியத்திற்கு அழைத்துச் செல்லும். அதிலும் குறிப்பாக சுப்பிரமணியசிவா ஹரி இவர்களுக்கு இடையே இருக்கும் அண்ணன் தம்பி பாசம் மற்றும் அந்த அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் வலியும் வேதனையும் நம்மை மிகவும் பதபதைக்க செய்யும். இரண்டாம் பாதியில் சில குறிப்பிட்ட காட்சிகள் தியேட்டரில் பல பெண்கள் கண்ணீர் சிந்துவது கண்டிப்பாக உணர முடியும். மிகவும் உணர்வுபூர்வமான இரண்டாம் பாதி ஒட்டுமொத்த படத்தின் கதையை தூக்கி நிறுத்தும் விதமாக திரைக்கதை அமைந்திருக்கிறது. படத்தில் மிகப்பெரிய ஒரு ஆறுதல் என்னவென்றால் சீரியசான இந்த படத்தில் தங்கராஜ் கதாபாத்திரத்துடன் நடித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி கதாபாத்திரம் பல இடங்களில் நக்கலும் நையாண்டியும்யாக சில வசனங்கள் மூலம் ரசிகர்களுக்கு குபீரென்று சிரிப்பை வரவைப்பது தான் .
பல டிவிஸ்டுகள்
சில பல காட்சிகள் மட்டுமே வந்தாலும் சரண்யா வாக நடித்திருக்கும் நடிகை இனியா மிக முக்கியமான ரோல் செய்திருக்கிறார். தான் குதிரை ஓட்டுவதும் அதன்பின் குதிரையுடன் சரண்யா கதாபாத்திரத்தையும் அடக்க முயற்சி செய்வதும், அதிலிருந்து திரைக்கதையில் ஏற்படும் பல டிவிஸ்டுகள் நம்மை மேலும் மேலும் வசியப்படுத்தும்.படத்தின் கேமரா ஒர்க் , இசை, கலை மற்றும் எடிட்டிங் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காட்சிக்கு காட்சி மிகவும் சுவாரசிய படுத்துகிறது.
சங்கம் கண்டிப்பாக அமைய...
மருதமுத்து வக்கீலாக நடிகர் ஜி எம் சுந்தர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இரண்டாம் பாதியிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் மிகவும் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. வட இந்திய டெப்பிட்டி கமிஷனர் கதாபாத்திரத்தில் வருபவரும், ஹிந்தி கலந்த தமிழ் வசனங்கள் பேசுவதிலும் அதிகார வர்க்கத்தின் மனநிலையை உணர்த்துவதும் இயக்குனர் மிகவும் தெளிவாகவும் தீவிரமாகவும் செயல்பட்டிருக்கிறார். காவல்துறை அதிகாரிகளின் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது என்பதை மேலோட்டமாக மட்டும் பார்க்காமல் மிகவும் ஆழமாக சிந்தித்து காவல்துறை அதிகாரிகளுக்கு என்று ஒரு சங்கம் கண்டிப்பாக அமைய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி திரைக்கதை மூலம் தெளிவாக உழைத்து உரக்கச் சொல்கிறார் இயக்குனர் பிராங்கிளின்.
அடிப்படை உரிமைகளை
படத்தின் மைனஸ் என்று பார்த்தோமேயானால் இரண்டாம் பாதியில் இருக்கும் சுவாரசியம் முதல் பாதியில் மிகக்குறைவாக இருப்பதுதான். முதல் பாதியில் இருக்கும் தொய்வுகளை கொஞ்சம் அகற்றி இருந்தால் இந்தப் படம் இன்னும் முழுமையாக மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். இருப்பினும் இரண்டாம் பாதியில் வரும் கிளைமாக்ஸ் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு மிக முக்கியமான காட்சியாகும். எந்த ஒரு படத்திற்கும் கிளைமாக்ஸ் தான் படத்தின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்தும் என்பதை நன்கு புரிந்து கிளைமாக்ஸ் காட்சியை மிக அற்புதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற சிந்தனையையும் ஒரு பக்கம் வைத்து இன்னொரு பக்கம் அம்பேத்கர் புகைப்படத்துடன் இறுதிக் காட்சியை மிகவும் கம்பீரமாக முடித்த விதம் அனைவராலும் பாராட்டத்தக்கது. காவல்துறை அதிகாரிகளின் உணர்வுகளையும் அவர்களது அடிப்படை உரிமைகளையும் சொல்லும் இந்த ரைட்டர் படம் கண்டிப்பாக இன்றைய சமுதாயம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படமாகும். குடும்பத்துடன் சென்று தியேட்டரில் இந்த படத்தை பார்க்கலாம்.காவல்துறையில் பணிபுரியும் காவலர்களை ஒரு பக்கம் மக்கள் வெறுத்தாலும் இன்னொரு பக்கம் கண்டிப்பாக நேசிக்க வேண்டும் என்பதை காட்சிகள் மூலம் வலியுறுத்தி காவலாளிகளை அவர்களது வேலையில் உள்ள உரிமைகளை புரிய வைத்த படம் பிராங்க்ளின் இயக்கிய "ரைட்டர்" திரைப்படம்.