மணலுக்குள் 'புதைந்த' வினய்!

உன்னாலே உன்னாலே புகழ் வினய், மணல் புயலில் மாட்டிக் கொண்டு உயிர் தப்பிய 'கதை'யை பார்ப்பவரிடமெல்லாம் பரப்பி வருகிறார்கள் மோதி விளையாடு குழுவினர்.
காதல் மன்னன் தொடங்கி வட்டாரம் வரை பல படங்களை இயக்கிய சரண், சில நெருக்கடிகளுக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் இயக்கிவரும் படம் மோதி விளையாடு.
வினய்-காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துபாயில் நடந்தது. துபாய் மணல் குன்றுகளின் நடுவே நடந்த இப்படப்பிடிப்பில் வினய் கார் ஓட்டி வருவது போல காட்சியை வைத்திருந்தார் சரண்.
அப்போது பார்த்து திடீர் என்று மணல் புயல் வீச, காரோடு மணலுக்குள் புதையத் துவங்கினார் வினய். பின்னர் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிப்போய், வினய்யை மணலுக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர்.
மயக்கமடைந்த நிலையிலிருந்த வினய்யை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர். மூக்கு, வாய் என எங்கும் மணல் அடைத்துக் கொண்டிருந்தது. அவற்றையெல்லாம் நீக்கிய பிறகே வினய் இயல்பு நிலைக்குத் திரும்பினார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்லாம் சரிதான்... மணல் புயலில் வினய் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டது எப்படி... துபாயில் ஒரே ஒரு ஆளுக்கு மட்டும் மணல் புயல் வீசுமோ... உங்க 'பிஆர்ஓ' கிட்ட லாஜிக்கை 'கரெக்ட்' பண்ண சொல்லுங்க சரண்!


Click it and Unblock the Notifications











