சினிமா படப்பிடிப்பில் திடீர் மோதல்; மாணவருக்கு அடி-உதை

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் நகுல் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத சினிமா படப்பிடிப்பு நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடந்தது.
அப்போது செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களில் ஒரு பகுதியினர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றனர். கமலக்கண்ணன் என்ற மாணவர் நடிகர் நகுலை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அவரை சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான சென்னை மதுரவாயலை சேர்ந்த செல்வம் கண்டித்தளார்.
இதற்கு மற்ற மாணவர்கள், 'அவர் சினிமாவில் தான் ஹீரோ, நிஜத்தில் இல்லை' என்று கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம், மாணவர் கமலக்கண்ணனை அடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர் கமலக்கண்ணன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரயில் மறியல்...
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் திடீரென ரயில் தண்டவாளத்தின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டவுன் இன்ஸ்பெக்டர் பழனி, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிநாதன் ஆகியோர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இச்சம்பவம் தொடர்பாக ஸ்டண்ட் மாஸ்டர் செல்வத்திடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











