ஹன்ஸிகதாவின் 'உதவும் கரங்கள்'
சாலையில் அடிபட்டுக் கிடந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு போன ஹன்ஸிகா!
எப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும், கஷ்டப்படும் ஒருவரை பார்த்ததும் இரங்குவதுதான் மனிதப் பண்பு.
நடிகை ஹன்ஸிகா தன்னை ஒரு மனிதாபிமானியாகக் காட்டிக் கொண்டுள்ளார், சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒருவருக்கு உரிய நேரத்தில் உதவியதன் மூலம்.
மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஹன்ஸிகா. அடிப்படையில் இவர் ஒரு இந்தி நடிகை.
இப்போது தமிழில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக, ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருடன் தாயார் மோனாவும் வந்தார். மோனா, 'எம்.பி.பி.எஸ்.' படித்த டாக்டர்.
மதுரை விமான நிலையத்தில் இருவரும் இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, 'இன்று உங்களுக்கு படப்பிடிப்பு இல்லை. ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார். ஹன்சிகா மோத்வானியும், அவருடைய தாயார் மோனாவும் கார் மூலம் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
ரத்த வெள்ளத்தில்...
அப்போது, ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார்த்த ஹன்சிகா மோத்வானி, காரை நிறுத்தும்படி கூறினார். ஆனால் 'நம்ம ஊர் நல்லவரான' டிரைவர், 'நமக்கு எதற்கு வம்பு?' என்று காரை நிறுத்தாமல் சென்றார்.
ஹன்சிகா மோத்வானி உரத்த குரலில் சத்தம்போட்டு காரை நிறுத்தும்படி கூறினார். டிரைவர் காரை நிறுத்தியதும் ஹன்சிகா மோத்வானியும், அவருடைய தாயாரும் ரோட்டை கடந்து எதிர்புறம் சென்றார்கள். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஹன்சிகா மோத்வானியின் தாயார் பரிசோதித்தார். அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.
உதவிய மக்கள்
அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. ஹன்சிகா மோத்வானியை அடையாளம் கண்டுகொண்டார்கள். ஆம்புலன்ஸ் வந்ததும், அடிபட்டு கிடந்தவரை தூக்கி ஆம்புலன்சுக்குள் கிடத்தினார்கள். ஹன்சிகா மோத்வானியின் தாயார் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். அந்த ஆம்புலன்சை, ஹன்சிகா மோத்வானி காரில் பின் தொடர்ந்தார்.
அருகில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அந்த முதியவரை அனுமதித்தார்கள். அவருடைய சட்டைப்பையில் இருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். அடிபட்டு கிடந்தவரின் மனைவி அலறியடித்துக்கொண்டு வந்தார். ஹன்சிகா மோத்வானிக்கும், அவருடைய தாயாருக்கும் நன்றி தெரிவித்தார்.
அவருக்கு ஹன்சிகா மோத்வானி பண உதவியும் செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.


Click it and Unblock the Notifications











