மணிரத்னம் டென்ஷன்!!

ராவண் படத்தை ஆரம்பித்ததிலிருந்து மணிரத்னமும் அவர் குழுவினரும் சந்தித்த பிரச்சினைகளை படமாக எடுத்தால் அது ராமாயணம் போல நீளும் போலிருக்கிறது.
கேரள வனத்துறை வழக்கு, மணிரத்னம் நெஞ்சு வலி, படப்பிடிப்பில் பாகனை யானை கொன்றது, கேரவன்களின் பர்மிட்டுகள் முடக்கம், வட இந்திய வனத்துறையினருடன் சிக்கல்.... இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள்.
இத்தனை சிக்கல்களுக்கு நடுவிலும் எப்படியோ தட்டுத் தடுமாறி, இறுதிக் கட்ட படப்பிடிப்புக்கு வந்துவிட்டார் மணி.
மராட்டிய மாநிலம் மால்ஷெட்ஜ் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டம். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம் என பெரும் நடிகர் பட்டாளமே குவிந்துவிட, படப்பிடிப்பு துவங்கும் நேரம் பார்த்து அடிக்கத் துவங்கியதாம் அடை மழை. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்க, மணிரத்னமும் இரண்டு நாள் மவுனமாக வேடிக்கை பார்த்துள்ளார்.
ஆனால் அதற்கு மேலும் மழை வலுக்கவே, பெரிய நடிகர்களின் கால்ஷீட்டல்லாம் வீணாகப் போகிறதே என்ற கடுப்பில், அந்த மழையிலேயே கொஞ்சம் ஷூட் செய்தும் பார்த்தாராம்.
ம்ஹூம்... ஒன்றும் வேலைக்காகவில்லையாம். டென்ஷனான மணி, ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, மழை ஓயக் காத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











