தொட்டுப் பார் படத்துக்காக கத்தி போட்ட 1000 துணை நடிகர்கள்!

கத்தியைக் கீழே போடுவதல்ல... மார்பில் கத்தியால் அடித்துக் கொள்வதுதான் இந்த கத்தி போடுதல். இப்படி கத்தியால் அடித்துக் கொள்ளும்போது இளைஞர்கள் மார்பிலிருந்து ரத்தம் தெறிக்கும். ஆனால் கொஞ்சமும் சுணங்காமல் தொடர்ந்து கத்தி போட்டபடி வருவார்கள் இந்த பக்தர்கள். மதுரைப் பக்கத்தில் இப்போதும் இந்த வழக்கம் உள்ளது.
தொட்டுப் பார் படத்துக்காக இந்த கத்தி போடுதல் நிகழ்ச்சியின் பின்னணியில் கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டது. இதில் நடிக்க 1000 துணைநடிகர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 1000 பேரும் நிஜமாகவே ஒரு வாரம் அம்மனுக்கு விரதமிருந்து கத்தி போட்டு வந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் நந்து இப்படிக் கூறுகிறார்:
"தொட்டுப் பார் படம் ஒரு புதிய முயற்சி. குறிப்பாக இந்த கத்திபோடும் காட்சி, தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயம். தென் தமிழக மக்களிடையே பிரபலமான இந்த நிகழ்ச்சியை 1000 துணை நடிகர்களை வைத்து நான்கு நாட்கள் படமாக்கியுள்ளோம். உண்மையான பக்தியோடு, இந்தக் காட்சியை எடுத்தோம். நிஜமாகவே கத்திபோட்டார்கள். அப்போது அவர்கள் மார்பில் உண்மையாகவே ரத்தம் வழிந்தது" என்றார்.
இந்தப் படத்தில் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த வித்யார்த் என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நாயகன் படப் புகழ் ரமணா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்த லக்ஷணா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
பிரியதர்ஷன், பேரரசு, விக்ரம் குமார் போன்றவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இந்தப் படத்தின் இயக்குநர் நந்து என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











