நெல்லையில் மலையாளப் படப்பிடிப்பு: பத்மப்ரியா குழுவினரை விரட்டியடித்த தமிழ் இளைஞர்கள்!
'நம்பர் 66 மதுரை பஸ்' என்ற மலையாள படத்தில் பத்மபிரியாவும் பசுபதியும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் உள்ள சுந்தரபாண்டிபுரத்தில் நடந்தது. அங்கு அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். பசுபதியும் பத்மபிரியாவும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது இளைஞர்கள் பலர் கும்பலாக படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்தனர். முல்லைப் பெரியாறு மூலம் எங்களுக்கு தண்ணீர் கொடுங்கள் அல்லது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளாவுக்கு ஓடுங்கள் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
அவர்களை படக்குழுவினர் சமாதானபடுத்த முயற்சித்தனர். ஆனால் இளைஞர்கள் தொடர்ந்து கோபத்துடன் குரல் கொடுத்தனர்.
மலையாள படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்தக் கூடாது, வெளியேறுங்கள் என விரட்டினர். எனவே வேறு வழியின்றி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அரங்குகளை பிரித்து எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் நிஷாத் கூறுகையில், "தென்காசியில் பத்மப்ரியாவை வைத்து நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு சுந்தரபாண்டியபுரத்துக்கு வந்தோம்.
இங்கு படப்பிடிப்பை துவங்கிய போது 40 பேர் பேனர்களுடன் வந்து முற்றுகையிட்டனர். முல்லைப் பெரியாறில் தண்ணீர் தர மறுக்கும் நீங்கள் படப்பிடிப்பு நடத்தக் கூடாது ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று கெடுவிதித்தனர். இதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் என்றார்.
பத்மப்ரியா கூறும் போது படப்பிடிப்பை நிறுத்தி விட்டு வெளியேறும்படி கூறியதும் இங்கிருந்து புறப்பட்டு விட்டோம் முல்லை பெரியாறு பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் அந்த சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. எங்களுக்கு அதில் சம்பந்தமில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications












