நிஜ வில்லனான பிரகாஷ் ராஜ்!

இயக்குநர் பிரபுதேவா மற்றும் நாயகன் விஜய் இருவரும் டென்ஷனாகி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் செய்யத் தயாரான நிலையில், படப்பிடிப்புக்கு வருவதாக திடீர் செய்தி அனுப்பியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
படப்பிடிப்புகளுக்கு உரிய நேரத்தில் வராமல் போவது அல்லது படப்பிடிப்புகளுக்கே டிமிக்கி் கொடுப்பதில் பிரகாஷ் ராஜுக்கு இணை யாருமில்லை என திரையுலகில் பேசிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசம்.
தெலுங்கில் நம்பர் ஒன் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த பிரகாஷ் ராஜூக்கு, தெலுங்கு பிலிம்சேம்பரே தடை விதிக்கும் அளவுக்குப் போனது. காரணம் இவரது நேரம் தவறும் வழக்கம்தான். ஆனாலும் தமிழில் அவரது நல்ல நடிப்புக்காக அதையும் பொறுத்துக் கொண்டனர் சக நடிகர்களும், தயாரிப்பாளர்களும்.
ஆனாலும் தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை பிரகாஷ்.
ஐங்கரன் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் லண்டன் கருணாஸ் தயாரித்து வரும் படம் வில்லு. இப்படத்தில் விஜய் முதல் முறையாக தந்தை, மகன் என இரு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி நயன்தாரா.
பிரபுதேவா இயக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்த நிலையில், முக்கியமான இறுதிக்காட்சி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. 250க்கும் மேற்பட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோர் க்ளைமேக்ஸ் காட்சிக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
சண்டை இயக்குனர் பெப்சி விஜயன் இயக்கத்தில் க்ளைமேக்ஸ் சண்டை காட்சி அங்கு எடுக்கப்பட்டது. அப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ் வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய், பெப்சி விஜயன், இயக்குனர் பிரபுதேவா உள்ளிட்ட அனைவரும் நேற்று முன் தினம் படப்பிடிப்புக்காக வந்திருந்த நிலையில் பிரகாஷ் ராஜ் மட்டும் வரவில்லை.
நீண்டநேரமாக காத்திருந்த அவர்கள் பிரகாஷ் ராஜ் வராததால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டுத் திரும்பினர். நேற்றும் பிரகாஷ் ராஜுக்காக அவர்கள் காத்திருந்த போதும் அவர் வரவில்லை.
இதனால் இருநாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளருடன் சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பிரகாஷ்ராஜ் திடீரென மாயமானார் என பின்னர் தெரிய வந்தது.
இன்று மூன்றாவது நாள் பிற்பகலில் வருவதாகக் கூறியவர், இதுவரை நடிக்க வராததால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய முடிவெடுத்துள்ளது படத் தயாரிப்பு நிறுவனமும், இயக்குநரும்.


Click it and Unblock the Notifications











