5 நகரங்களில் பட்டாபட்டி படக் குழுவின் கிரிக்கெட் போட்டி

முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நாயகனாக நடித்துள்ள படம் பட்டாபட்டி. கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்த கதை என்பதால் இதில் நடித்துள்ளார் ரமேஷ்.
யுவராஜ் என்பவர் இயக்கியுள்ளார். முரளிராமன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், இந்திய தேர்வுக் குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியின்போது ரமேஷ் பேசுகையில், கிரிக்கெட் கதை என்பதால் இதில் நடிக்க சம்மதித்தேன். நல்ல அனுபவம் கிடைத்தது.சக நடிகர்கள் எனக்கு நிறைய உதவினார்கள் என்றார்.
முரளிராமன் பேசுகையில், இந்த படம் முற்றிலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து படமாக்கப்பட்டிருப்பதால், பட்டாபட்டி 50-50 என்ற பெயரில், தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடத்த இருக்கிறோம்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 இடங்களில் இந்த போட்டிகள் நடைபெறும்.
திருச்சியில் ஜுலை 24, 25ம் தேதிகளில் நேஷனல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
மதுரையில் ஜுலை 25, 26ம் தேதிகளில் அமெரிக்கன் கல்லூரி மற்றும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும்.
சென்னையில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட்1ம் தேதிகளில் டிரஸ்ட்புரம் மைதானத்தில் நடைபெறும்.
கோவையில் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் என்ஜிபி கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
சேலத்தில் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் நடைபெறும்.
இறுதிப் போட்டியை ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் சென்னையில் வைத்துள்ளோம்.
போட்டியில் கலந்துகொள்ள ஒவ்வொரு இடத்துக்கும் 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். அந்தந்த ஊர்களில் வெற்றிபெறும் அணியினர், சென்னையில் நடைபெறும் இறுதி போட்டிகளில் விளையாடுவார்கள்.
இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரொக்க பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











