ராவண்... சிக்கலுக்கு மேல் சிக்கல்!

படம் துவங்கப்பட்ட நாளிலிருந்து அடுத்தடுத்து எழுந்த பிரச்சினைகளால் விழி பிதுங்கி நிற்கிறார் மனிதர்.
தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தமிழிலும், இந்தியிலும் தயாரித்து இயக்கி வரும் படம் ராவண்.
இந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாகவும், தமிழ்ப் படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்கள். இரு மொழியிலும் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரபு, கார்த்திக், பிருதிவிராஜ், பிரியாமணி உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.
ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு, மராட்டிய மாநிலம் தானே மற்றும் புனே மாவட்ட எல்லைகளை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த 14 பேர் மராட்டிய வனத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை துணை பாதுகாவலர் சுபாஷ் ஷெல்கே கூறுகையில்,
சம்பந்தப்பட்ட காட்டுப்பகுதியில் கடந்த வாரம் வனத்துறை அதிகாரிகள், வழக்கமான ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்கு படப் பிடிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நிலப்பகுதியை வெட்டி சமப்படுத்தி இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறவில்லை.
எனவே, அனுமதியின்றி சட்டவிரோதமாக காட்டுப்பகுதிக்குள் நுழைந்ததற்காகவும், வனச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காகவும், ராவண் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன பாதுகாப்பு சட்டம், 1980 மற்றும் இந்திய வன சட்டம், 1927 ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, படப்புக் குழு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகுதான், படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு, பட நிறுவனம் சார்பில் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக அவர்கள் ரூ.2.5 லட்சம் முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளனர். படப்பிடிப்பை 27-ந் தேதி ஆரம்பித்து, 2 வாரங்கள் நடத்தப் போவதாக கூறியுள்ளனர். இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை, என்றார்.
ஏற்கெனவே, வாகன விதிமுறைகளை மீறி போலி ஆர்சி புத்தகங்களுடன் கேரவனைப் பயன்படுத்தியது, கேரள வனத்துறையினருடன் தகராறு, விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியின்றி விலங்குகளைப் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தியது, ராமாயணத்தை கொச்சைப் படுத்தியதாக இந்துத்துவா அமைப்புகளின் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டது... என பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது ராவண் படப்பிடிப்பு.


Click it and Unblock the Notifications











