எந்திரன் படப்பிடிப்பு...டெல்லியில் அனுமதி மறுத்தது ஏன்?

தீவிரவாதிகள் தாக்குதல் ஆபத்து இருப்பதால் படப்பிடிப்புக்கு அனுமதி தரமுடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திலேயே எடுத்து வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டாலும், பேட்ச் அப் காட்சிகளாக சிலவற்றை எடுக்க விரும்பினார் ஷங்கர்.
இதற்கான படப்பிடிப்பை டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடமும் அங்கு தேர்வு செய்யப்பட்டது.
படப்பிடிப்புக்கு போலீஸ் அனுமதி கேட்டனர். மனுவை ஆய்வு செய்த டெல்லி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் படப்பிடிப்பில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க தடை போட்டதாக கூறப்படுகிறது. டெல்லிக்கு பயணமாக தயாராக இருந்த ரஜினி, ஐஸ்வர்யாராய்க்கு கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணத்தை ரத்து செய்து விட்டனர். இதனை ரஜினியே முன்பு முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் தெரிவித்தது நினைவிருக்கலாம்.
டெல்லிக்கு பதில் வேறு எங்கு படப்பிடிப்பை நடத்தலாம் என்று ஆலோசித்த ஷங்கர், சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்திலேயே சம்பந்தப்பட்ட காட்சியை நேற்று படமாக்கினார்.
ஐஸ்வர்யா ராயை தூக்கிப் போய் ரஜினி தாலி கட்டுவது போலவும், போலீசார் ரஜினியை கைது செய்வது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பைக் காண ஏராளமானோர் கூடிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











