கமலுடன் கவிதை வாசித்த த்ரிஷா!

யாவரும் கேளிர், காருண்யம் என பலவாறாக தலைப்பு சொல்லப்பட்டு, இப்போது 'இன்னும் பெயர் வைக்கப்படாத கமல் படம்' என்று விளிக்கப்படும் இந்த புதிய படத்தின் ஷூட்டிங், வரும் ஜூன் முதல் வாரம் மான்டி கார்லோவில் துவங்குகிறது.
மத்தியதரைக் கடலில் மிதக்கும் ஒரு சொகுசு கப்பலில் முக்கிய காட்சிகள் படமாக உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கமல்-த்ரிஷா மற்றும் சில குழந்தைகள் இணைந்து கவிதை ஒன்றினை வாசிப்பது போன்ற காட்சி வருகிறதாம்.
பின்னணி பாடகர்கள் யாரையும் வைத்து இந்தக் கவிதையை வாசிக்க வைக்காமல், கமல் - த்ரிஷா- குழந்தைகளையே பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.
செவ்வாய்க்கிழமை மாலை, சாலிகிராமத்தில் உள்ள தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவுக்கே சென்று இந்த கவிதையை வாசித்துக் கொடுத்துள்ளனர் கமலும் த்ரிஷாவும்.
இந்தப் படம் தனது கேரியரில் மிக முக்கியமானது என்று கூறிவரும் த்ரிஷா, கமலுடன் இணைந்து மாண்டி கார்லோவுக்குப் பறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம்!


Click it and Unblock the Notifications











