பாகனை மிதித்துக் கொன்ற யானை... மணிரத்னம் ஷூட்டிங்கில் விபரீதம்!

ராவணா படத்தை அவர் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து பல சிக்கல்கள், சோதனைகளைச் சந்தித்து வருகிறார். படம் ஆரம்பிக்கும்போதே தயாரிப்பாளர்கள் சரியாக அமையவில்லை. முதலில் வந்து யுடிவி வந்த வேத்தில் ஓடிப்போக, பின்னர் வந்த ரிலையன்ஸும் பாதியில் கழன்று கொள்ள, இப்போது மணிரத்னமே தனியாகத் தயாரிக்கிறார்.
பின்னர் கேரள வனத்துறையினருடன் பிரச்சினை. இதையெல்லாம் விட பெரிய சோதனை மணிரத்னத்துக்கு வந்த மாரடைப்பு. இதனால் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் படம் சுணங்கிப் போனது. அதன் பிறகும் சோதனை தொடர்ந்தது.
ஆர்டிஓக்கள் காரவன்களைப் பறிமுதல் செய்தார்கள், மீண்டும் கேரள வனத்துறை பிரச்சினை செய்தது, இந்துத்வா அமைப்புகள் கொடிபிடித்தன... இப்போது மீண்டும் சிக்கல்.
இந்த முறை மதம் பிடித்த யானை ஒன்று மணிரத்னத்தையும் அவரது யூனிட்டையும் மிரட்டி விட்டதாம். அதிரப்பள்ளியில் நேற்று புதன்கிழமை படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த மணிரத்னத்தின் செட்டில் இருந்தது அந்த யானை. திடீரென அதற்கு மதம் பிடித்துவிட, செட்டை துவம்சம் செய்துவிட்டதாம். தனது பாகனையும் தரையில் அடித்துக் கொன்றுவிட்டதாம். இறந்த அந்த பாகன் பெயர் ஆதவன்.
கண்ணெதிரே நடந்த இந்தக் கொடிய சம்பவம் பார்த்து மணிரத்னம் உள்ளிட்ட யூனிட்டே அதிர்ந்து நிற்க, அங்கிருந்து அவர்கலை அடந்த காட்டுப் பகுதிக்குப் போகவைத்தார்களாம் கேரள வனத்துறையினர்.
பின்னர் ஒரு வழியாக நிலைமை சரியானபிறகுதான் வெளியே வந்தார்களாம். இந்த சம்பவத்தால் மிகவும் திகிலில் ஆழ்ந்து போனவர்கள் நாயகன் அபிஷேக் பச்சன் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராய்தானாம்.
'இனி கேரளாவே வேணாம்... பேசாம ஊட்டி, குன்னூர் பக்கம் போயிடலாம்' என்று கூறி தனது படக்குழுவினரை சமாதானப்படுத்தினாராம் மணிரத்னம்.


Click it and Unblock the Notifications











