தமிழ் கிராம அடையாளத்தை நினைவூட்ட வரும் 'வாகை சூடவா'!

களவாணி என்ற மிகப் பெரிய ஹிட் படம் தந்த சற்குணம் இயக்கும் இரண்டாவது படம் வாகை சூடவா.
இந்தப் படத்துக்காக கண்டெடுத்தான் காடு என்ற கிராமத்தையே உருவாக்கியிருக்கி, அதில் 60 குடும்பங்களை மூன்று மாதங்களுக்கும் மேல் வசிக்க வைத்திருக்கிறார் சற்குணம். இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். போலியோ சொட்டு மருந்து கொடுக்க வந்த செவிலியர்கள், இதை நிஜ கிராமமென்று நம்பி, மருந்து போட குழந்தைகளைக் கொண்டு வாருங்கள் என்றார்களாம்!
கருப்பட்டி பாலில் டீ போட்டு அதை இரண்டு பைசா, மூன்று பைசாவுக்கு விற்கும் கதாநாயகிக்கும், பியூசி முடித்துவிட்டு வாத்தியார் வேலைக்குதான் போவேன் என்ற வைராக்கியத்தோடு வசிக்கும் நாயகனுக்குமான காதலை, மண்ணும் மனிதமும் இழையோட சொல்லியிருக்கிறாராம் இந்தப் படத்தில் சற்குணம்.
விமல்தான் ஹீரோ. இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வித்தியாசமான கிராமத்து ஹீரோவாக வருகிறார். படத்தின் முக்கிய பாத்திரத்தில் பாக்யராஜ் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், இன்றைக்கு பலரும் கேள்விப்பட்டிராத, அன்றைய கிராமத்து உணவுகளை காட்டியிருக்கிறார்களாம். சோளச் சோறு, கேழ்வரகு பணியாரம், குழி பணியாரம், சுட்ட கம்பங் கதிர், சுட்ட கருவாடு, வரகரிசி சோறு, கேழ்வரகு கூழ்... இப்படி 50 வகை கிராமத்து உணவுகளை தயார் செய்து அவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் ஸ்டில்களில் அவற்றைப் பார்க்கும்போதே நாக்கில் நீர் சுரக்கிறது. எடுத்தவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்!!
எம் ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்துவும் அறிவுமதியும் எழுதியுள்ளனர். எஸ் முருகானந்தம் தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











