அகத்தியனின் 'கம்-பேக்'!

காதல் கோட்டை மூலம் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் அகத்தியன். அந்தப் படம் வந்த பிறகு பார்க்காமேல காதல், பேசாமலே காதல், சொல்லாமலே காதல், காதலே இல்லாமல் காதல் என்று விதம் விதமான காதலைச் சொல்லும் படங்களைக் கொடுத்தனர் தமிழ் திரையுலகினர்.
அந்த அளவுக்கு காதல் கோட்டை ஒரு டிரெண்ட் செட்டராக அமைந்தது. அதிலும் கமலியாக நடித்த தேவயானிக்கு அந்த கேரக்டர் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. கமலி என்ற பெயரும் பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆனது.
பின்னர் விடுகதை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அகத்தியன் இடையில் படங்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் அமைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அகத்தியன்.
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்தான் இப்படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக அம்முவாகிய நான் பாரதி நடிக்கிறார். கூடவே தர்ஷா, ரோஷிகா, லக்ஷனா என பலரும் உள்ளனர்.
இளைஞர்களுக்கான படம் என்றாலும் இதில் இதயத்ைத தொடும் கருத்துக்களும் அடங்கியிருக்கும் என்கிறார் அகத்தியன்.
குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும் என்று அடித்துச் சொல்கிறார் அகத்தியன். வழக்கமாக தமிழ் சினிமாக்களில் கிளைமாக்ஸ் காட்சி என்றால் சரமாரியாக வில்லனும், ஹீரோவும் அடித்துக் கொள்வார்கள். அடித்து முடித்து விட்டு பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள்.
ஆனால் அகத்தியனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே கிளைமாக்ஸ் படு வித்தியாசமாக இருக்குமாம். அதாவது ஒரு பாடல் மூலம் கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்துள்ளாராம் அகத்தியன்.
கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு அந்தக் காட்சி வருகிறதாம். ஒரு பாடலில் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களையும் விளக்குகிறாராம் அகத்தியன்.
கேட்கவே நெஞ்சத்தை அள்ளுதே!


Click it and Unblock the Notifications











