இந்தி படத்துக்கு துபாயில் அபராதம்
முறையான அனுமதி இல்லாமல், துபாயில் ஷூட்டிங் நடத்திய இந்திப் படம் தேஷ் துரோகிக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
பிஜே புரடக்ஷன் என்ற நிறுவனம் தேஷ் துரோஹி என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. கமல் ரஷீத் கான் என்பவர் இதில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியையும், மேலும் சில காட்சிகளையும் கடந்த சனிக்கிழமை துபாயில் உள்ள முக்கியப் பகுதியான கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு முன்பாக உள்ள சாலையில் நடத்தினர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது.
இதனால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திப் படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி இல்லாமல் நடந்தது குறித்து துபாய் ஸ்டுடியோ சிட்டி என்ற அமைப்பு (சினிமா படப்பிடிப்புகளை கண்காணிக்கும் அமைப்பு இது) துபாய் சாலை போக்குவரத்து ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜமால் அல் ஷெரீப் கூறுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நாங்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது, அபராதமும் விதிக்க முடியாது. அதேசமயம் உரிய அதிகாரிகளிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
ஷூட்டிங் நடத்திய பட நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் நடக்கும் எந்தப் படப்பிடிப்பாக இருந்தாலும் முதலில் துபாய் ஸ்டுடியோ சிட்டியிடம் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேஷ் துரோஹி படப்பிடிப்பின் காரணமாக படப்பிடிப்பு நடந்த ஷேக் சயத் சாலையில் சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டதாம். இதுதொடர்பாக பலர் புகார் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அல் ஷெரீப் தொடர்ந்து கூறுகையில், படத்தின் தயாரிப்பாளர் துபாயிலேயே பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அந்த நிறுவனமும் இங்கிருந்துதான் செயல்படுகிறது. எனவே விதியை மதிக்க வேண்டும் என்று அவர்கள் உணராமல் இருந்திருக்கலாம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











