கோச்சடையானுக்காக 'ரேஸ் 2' படத்தை கைவிட்ட தீபிகா: எரிச்சலில் படக்குழு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே அறிவிக்கப்பட்டார். எப்படா ரஜினி கூட நடிப்பது என்று காத்துக் கொண்டிருந்த அவர் இந்த அறிவிப்பு வெளியானதும் தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 படத்தில் இருந்து திடீர் என்று வெளியேறினார். தனது செயலுக்கு வருத்தமும் தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து அவரிடம் பேச வந்த தயாரிப்பாளர் ரமேஷின் வார்த்தைகளைக்கும் அவர் மதிப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இது குறித்து தயாரிப்பாளர் ரமேஷ் கூறியதாவது,
நான் 25 ஆண்டுகளாக பாலிவுட்டில் இருக்கிறேன். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளேன். ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், வித்யா பாலன், கரீனா கபூர் போன்ற பிரபல நடிகைகளை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு சூழல் இதுவரை ஏற்பட்டதில்லை. கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பை நடத்தலாம் என்று பார்த்தால் தீபிகா கரண் ஜோஹார் தயாரிக்கும் அயன்முகர்ஜியின் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு டேட் பிரச்சனை இருந்தது. இதையடுத்து நான் கரணிடம் பேசி 2 படங்களிலுமே தீபிகா நடிக்க ஏதுவாக நேரம் ஒதுக்க வழிவகை செய்தேன்.
தற்போது 6 நாட்கள் ஷூட்டிங் வந்துவிட்டு படத்தில் இருந்து விலகிவிட்டார். இயக்குனர்களும், பிற நடிகர்களும் இதனால் எரிச்சல் அடைந்துள்ளனர். இது குறித்து பேச குர்லாவில் நடந்த தீபிகாவின் ஷூட்டிங் ஸ்பாடுக்கு சென்றேன். நான் பேசியதை அவர் காதில் வாங்கவில்லை. தன் செயலுக்காக வருத்தப்படவும் இல்லை என்றார்.
ரஜினியின் ராணா பட நாயகியாக தீபிகா அறிவிக்கப்பட்டார். சூப்பர் ஸ்டாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அந்த படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












