மீண்டும் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி... நானே வருவேன் படத்தின் சூட்டிங் துவக்கம்!
சென்னை : நடிகர் தனுஷ் -இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் படத்தின் சூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் செல்வராகவன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி தனுஷ் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

வெற்றிக் கூட்டணி
நடிகர் தனுஷ் அவரது அண்ணனின் இயக்கத்தில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன மற்றும் காதல் கொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவை அனைத்துமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவை.

நானே வருவேன் படம்
இந்நிலையில் இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் நானே வருவேன் என்ற படம் மூலம் இணைந்துள்ளது. கலைப்புலி எஸ் தாணுவின் வீ கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் -செல்வா கூட்டணியின் வெற்றிக்கு யுவனும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப் போன சூட்டிங்
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனுஷின் கால்ஷீட் பிரச்சினை மற்றும் பீஸ்ட் படத்தில் நடித்துவந்த செல்வராகவன் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. தற்போது திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு துவக்கம்
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கு ஏற்றாற்போல தற்போது படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. படத்தின் சூட்டிங் துவங்கியதையொட்டி தனுஷின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். செல்வராகவனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை தெரிவித்துள்ளார்.

இடைவிடாத படப்பிடிப்பு
மேலும் இன்றுமுதல் இடைவிடாத படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அந்தப் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு நானே வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தலைப்பில் எந்த மாற்றமும் இன்றி போஸ்டர் வெளியாகியுள்ளது.
Recommended Video

ஒரேகட்டமாக படப்பிடிப்பு
இதனிடையே படத்தின் படப்பிடிப்பு துவங்கி இடைவிடாது நடைபெறும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











