கடிக்க வந்த பாம்பு, கையைப் பிடித்து இழுத்த இயக்குநர்... மோனிகா பரபர தகவல்!
பாம்புகளின் பழிவாங்கும் குணத்தை கருவாக வைத்து, நஞ்சுபுரம் என்ற புதிய படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில், சின்னத்திரையில் பிரபலமான நடிகர் ராகவ் கதாநாயகனாக நடித்து, இசையும் அமைத்துள்ளார். ராகவின் மனைவி பிரீதா தயாரித்துள்ளார.
ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது.
நஞ்சுபுரம் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில், படத்தின் கதாநாயகி மோனிகா கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், "நஞ்சுபுரம் படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்தது. அப்போது, இந்த படத்தின் டைரக்டர் சார்லஸ், என் கையைப் பிடித்து இழுத்தார். அதாவது, கையைப் பிடித்து இழுத்து, என் உயிரை காப்பாற்றினார்.
அப்போது நான், ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஓடிவந்த இயக்குநர் சார்லஸ், என் கையைப் பிடித்து இழுத்தார். நான் ஆத்திரத்துடன் அவரைப் பார்த்தபோது, அவர் மேலே கையை காட்டினார்.
என் தலைக்கு மேலே மரத்தில் ஒரு பாம்பு தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அலறியடித்துக்கொண்டு ஓடினேன். என் உயிரை காப்பாற்றிய இயக்குநருக்கு நன்றி சொன்னேன்,'' என்றார்.
விழாவில், கலைஞர் டி.வி.யின் நிர்வாக அதிகாரி அமிர்தம் தலைமை தாங்கினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத் தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











