பொன்னர் சங்கர் படப்பிடிப்பை 1 மணி நேரம் பார்த்த கருணாநிதி!
பிரசாந்த் - சினேகா நடிக்கும் பொன்னர் சங்கர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த முதல்வர் கருணாநிதி ஒரு மணிநேரம் பார்வையிட்டார். தேவைப்பட்ட இடங்களில் திருத்தங்களைச் சொல்லி படப்பிடிப்புக் குழுவினரை உற்சாகப்படுத்தினார்.
தமிழர் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த இந்த நாவலை சரியான முறையில் படமாக்குவது அவசியம் என்றும் அவர் அறிவுரை கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதி எழுதிய வரலாற்று நாவல் பொன்னர் சங்கர்.
தமிழ் இலக்கியவாதிகளாலும், வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட தொடர்கதையாகத் திகழ்ந்தது. பின்னர் நாவலாக வெளியிடப்பட்ட போதும் விற்பனையில் பெரும் சாதனைப் படைத்தது.
இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்கிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். படத்தின் இயக்குநரும் தியாகராஜனே. அவர் மகன் பிரசாந்த் கதையின் நாயகனாகவும், அவருக்கு இணையான முக்கிய வேடத்தில் மத்திய இணை அமைச்சர் நெப்போலியனும் நடிக்கிறார்கள்.
இவர்களைத் தவிர ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சினேகா, அம்பிகா, குஷ்பு, சீதா உள்பட பெரும் நட்சத்திக் கூட்டமே இந்தப் படத்தில் உண்டு.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது. இதனைப் பார்க்க முதல்வர் வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு ஸ்டுடியோவுக்கு வந்த முதல்வர் கருணாநிதிக்கு அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். யூனிட் ஆட்கள், நடிகர் நடிகைகள் என அனைவரையும் நலம் விசாரித்த கருணாநிதி, சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் தளத்தில் அமர்ந்து படப்பிடிப்பை ரசித்தார்.
படப்பிடிப்பின் போது சில காட்சிகளில் திருத்தங்களைச் சொன்னவர், "இந்தக் கதை மிக முக்கியமானது. பிரசாந்த்துக்கு பொருத்தமாக உள்ளது. படமாக வரும்போது இன்னும் சிறப்பாக வரும். எச்சரிக்கையுடன் தரமாக எடுங்கள்" என அறிவுரைத்தார்.
முதல்வர் கதை வசனம் எழுதியுள்ள மற்றொரு படமான பெண் சிங்கம் படக்குழு பாடல் காட்சி படமாக்கத்துக்காக சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











