25 நாளில் எடுக்கப்பட்ட 'கொண்டான் கொடுத்தான்'!
பத்தாண்டுகளுக்கு முன் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு படங்களைக் கொடுத்தவர் வீ சேகர்.
அவரது ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், விரலுக்கேத்த வீக்கம், பொறந்த வீடா புகுந்த வீடா, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்தவை.
இந்தப் படங்களில் அவரிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜேந்திரன் முதல் முறையாக இயக்குநராகியுள்ளார். படத்தின் தலைப்பும் கூட வீ சேகர் பாணியிலேயே 'கொண்டான் கொடுத்தான்' என்று வைத்திருக்கிறார்.
ஐயப்பா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக கதிரும் (வெளுத்துக்கட்டு), கதாநாயகியாக அத்வைதாவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் இளவரசு, மீரா கிருஷ்ணன், சுலக்ஷனா, ராஜ்கபூர், மனோ பாலா, கஞ்சா கருப்பு, 'மைனா' நாகு ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் இப்படத்தின் இசை குறுந்தட்டை தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட, இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா பெற்றுக் கொண்டார்.
படம் குறித்து தேவா பேசுகையில், "கொண்டான் கொடுத்தான்' குடும்பப் படம். இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. இதிலே நா. முத்துக்குமார் எழுதிய தஞ்சாவூரு கோபுரம் அழகு...' பாடல் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது.
ரீரிக்கார்டிங் செய்வதற்காக இப்படத்தை முழுவதும் பார்த்தேன். சத்தியமா சொல்றேன் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது. அந்த அளவிற்கு படம் என்னை பாதித்தது," என்றார்.
25 நாட்களில்...
இந்தப் படத்தை 25 நாட்களிலேயே எடுத்து முடித்துவிட்டதாக இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமா என்றால், 'சரியா பிளான் பண்ணா 25 நாளில் ஒரு தரமான தமிழ்ப் படத்தைத் தரமுடியும்,' என்றார் உறுதியாக.


Click it and Unblock the Notifications











