இப்போ புதுச்சேரி.. அப்புறம் ஐதராபாத்.. புதுவையில் கூடிய பொன்னியின் செல்வன் டீம்.. பரபர படப்பிடிப்பு
சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு, இப்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.
கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் பிரபல இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் உருவாகிறது.
விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

கோயில்களில்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. இந்தப் படத்துக்காக, கோயில்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் கோயில்களில் படப்பிடிப்பு நடத்த பர்மிஷன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தாய்லாந்தில் ஷூட்டிங் நடந்ததாகவும் கூறப்பட்டது.

சென்னைத் திரும்பியது
அங்கு நடந்த படப்பிடிப்பில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அவர்கள் நடித்தக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது.

புதுச்சேரியில்
இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இப்போது இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துவருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. வரும் 10 ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.

பிரமாண்ட செட்
இங்கு நடிகர் ஜெயம் ரவி பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அவர் அருண்மொழிவர்மனாக நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. அவரும் துணை நடிகர்கள் சிலரும் பங்கு பெறும் காட்சிகளை கடற்கரை பகுதியில் படமாக்கி வருகின்றனர். இங்கு படப்பிடிப்பு முடிந்ததும், படக்குழு அப்படியே ஐதராபாத் செல்கிறது. அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதற்காக பிரமாண்ட செட் போடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications