பாடல் காட்சிக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்குகள்... ஒரே ஷெட்யூலில் நாடோடிகள் - 2 ஷூட்டிங்!
சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் - 2 படப்பிடிப்புக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள் - 2 படத்துக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்த படம் நாடோடிகள். கடந்த 2009ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாடோடிகள் - 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தை சமுத்திரக்கினியே இயக்குகிறார். சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோருடன், சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனர் சமுத்திரக்கனி கூறுகையில், "இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
நாடோடிகள் - 2 படப்பிடிப்பு ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைய உள்ளது.


Click it and Unblock the Notifications











