புதுமுக நடிகைக்கு கொலை மிரட்டல்-வாலிபர் மீது புகார்

கார்த்திகை ஜெய் மூவீஸ் பட நிறுவனத்தார் நெல்லு என்ற படம் தயாரித்து வருகின்றனர். பட அதிபர் ஸ்டேலியன் கார்த்திகேயன் இந்த புதிய படத்தை தயாரித்து வருகிறார். இயக்குனர் சிவசங்கர் படத்தை டைரக்ட் செய்கிறார்.
படத்தின் கதாநாயகனாக சத்யாவும், கதாநாயகியாக பாக்யா அஞ்சலியும் நடித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த பாக்யா அஞ்சலிக்கு இதுவே முதல் படம்.
கடந்த ஒரு மாதமாக கோபிசெட்டிப்பாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கோபியில் தங்கியுள்ள பாக்யாவின் செல்போனுக்கு கடந்த வாரமாக ஒரு வாலிபர் தொடர்ந்து எஸ்.எம்.எஸ்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்தார்.
இந் நிலையில் அந்த வாலிபர், தனது பெயரை ராஜா என்று கூறிக்கொண்டு நடிகை பாக்யா அஞ்சலியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
'நான் தயாரிக்கும் சினிமா படத்தில் கதாநாயகியாக நீ நடிக்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்' என்று கூறியதாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி நடிகையின் மேலாளர் ஈஸ்வரன், கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











