மகேஸ்வர் கோட்டையும்… இரு சைவ வைணவ பிராமணர்களும்… பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள போட்டோஸ்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
வரலாற்றுத் திரைப்படம் என்பதால் இப்படம் குறித்து வெளியாகும் அப்டேட்டுகளை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
சமீபகாலமாக படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன. தற்போது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன்
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை படிக்க படிக்க ஆர்வமும்... விவரிக்க முடியாத ஆனந்தமும் நம் மனத்திற்குள் புகுந்துவிடும். வர்ணணைகளும்... நயமான வார்த்தைகளும் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் சிறப்பு.

மணிரத்னத்தின் கனவுபடம்
இந்த வரலாற்று புதினத்தை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயரம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ் , வந்தியத் தேவனாக கார்த்தி,குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் ஒரு எதிர்மறையான கதாபாத்திரமாகும். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் மற்றும் பார்திபன் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

குவாலியரில்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் ,ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியரில் நடைபெற்று வருகிறது. குவாலியர் கோட்டை 9ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். குவாலியர் நகரம் அரண்மனைகள் கோவில்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள சாஹூ பகுகா கோவிலியில் அரிய வகையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. மேலும், சமண சிலைகளும் , உயரமான கோட்டை சுவர்களும் உள்ளன. அதேபோல ஓர்ச்சா நகரிலும் பல கோயில்களும், அரண்மனைகளும் உள்ளன.

மகேஸ்வர் கோட்டை
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஸ்வர் கோட்டையும் இரண்டு சைவ வைணவ பிராமணர்களும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கருப்பு வெள்ளையில் உள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஆர்வம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

நர்மதா நதிக்கரையில்
நடிகை த்ரிஷா சமீபத்தில் நர்மதை நதி பாயும் மகேஸ்வர் நகரின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அந்த கோட்டையில் தான் வந்தியத்தேவன் கார்த்தியும், குந்தவை த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானதை அடுத்து மணிரத்னம் படப்பிடிப்பு தளத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 பாடல்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல் இருப்பதாகவும், இதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எட்டு பாடல்களை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கவிஞர் கபிலன் இரண்டு பாடல்களையும், வெண்பல கீதையன் ஒரு பாடலையும், வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து ஒரு பாடலையும் எழுதியுள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











