வெள்ளியங்கிரியில் மாயமான ஆர்ட் டைரக்டர்... இன்னும் கிடைக்கலை
கோவை:மகாசிவராத்திரி தினத்தன்று வெள்ளியங்கிரி மலைக்கு போன சினிமா ஆர்ட் டைரக்டர் மாயமாகி ஒருமாதமாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறிவருகின்றனர்.
மதுபானக் கடை படத்தில் தன் விவசாய நிலத்தை டாஸ்மாக் கடை வைக்க கொடுத்துவிட்டு குடித்து குடித்து சாகும் விவசாயி கேரக்டரில் நடித்தவர் வினோ மிர்தாத்.
அவர்தான் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டரும்கூட. திண்டுக்கல்லைச் சேர்ந்த வினோவுக்கு டிரக்கிங் டூர் எனப்படும் மலையேறும் பழக்கம் உண்டு. அடிக்கடி மலைக்கு சென்று வருவாராம்.
மகாசிவராத்தியில் பயணம்
மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் பிப்ரவரி 27ந் தேதி கோவைக்கு அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக நண்பர்களிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
வழி தவறிய வினோத்
அடுத்த நாள் மதுபானக்கடை இயக்குனர் கமலக் கண்ணனுக்கு போன்செய்து "வழி தவறி வந்துட்டேன்"னு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது "எங்கே இருக்கேன்னு தெரியல ஏதாவது லேண்ட் மார்க் வந்ததும் போன் பண்றேன்"னு சொல்லியிருக்கிறார். அதன்பிறகு அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டதாம்.
தேடுதல் வேட்டை
இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. நண்பர்கள், போலீசார், காட்டு இலாகா அதிகாரிகள் தேடியும் இதுவரை வினோவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லையாம்.
ஒரு மாதம் நிறைவு
வினோ காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதமாகிறது. அவர் தற்போது ஒன்பது குழி சம்பத், நீர் நிலம் காற்று படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஒருமாதகாலமாக அவரைக் காணாமல் அவரது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











