ஆத்தி ஜெட் வேகம் காட்டுறாரே சூரி.. அந்த படத்தோட ஷூட்டிங் ஓவராம்.. விடுதலை 2வா மாமா?.. கருடன் மாப்ள!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சூரி. முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், பல நல்ல இயக்குநர்கள் அடுத்தடுத்து சூரியை கொத்திக் கொண்டனர். கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் கொட்டுக்காளி படத்தை இயக்கி உள்ள நிலையில், சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கருடன் படத்தையும் சூரி அதி வேகமாக முடித்து விட்டார் என்கின்றனர்.
பரோட்டா சூரியாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சூரி. சிவகார்த்திகேயன் உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் அவர் செய்த காமெடி காட்சிகள் வேறலெவலில் ரசிக்கப்பட்டன.

காமெடியன் டு ஹீரோ: காமெடி நடிகராக கலக்கும் அனைவருக்கும் கூடிய சீக்கிரமே ஹீரோவாக வேண்டும் என்கிற கனவு நாகேஷ் காலத்தில் இருந்து யோகி பாபு, புகழ் வரை இருக்கத்தான் செய்கிறது. அடுத்த நிலை வளர்ச்சிக்கு செல்ல முயல்வது அனைவரது விருப்பமாகவும் அதற்கு தேவையான உழைப்பை அவர்கள் சிந்துகின்றனரா என்பதில் தான் உள்ளது. சந்தானம் காமெடியனாக இருந்து சிரிக்க வைத்து வந்த நிலையில், ஹீரோவாக மாறிய பின்னரும் தொடர்ந்து நகைச்சுவை படங்களிலேயே நடித்து வருகிறார். இந்நிலையில், சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடியை ஒதுக்கி வைத்து விட்டு நடித்த நிலையில், ஸ்கோர் செய்திருந்தார்.
பல படங்கள்: ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி என சூரியின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் ரெடியாகி விட்டன. நேற்று வெளியான ஏழு கடல் ஏழு மலை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி உடன் இணைந்து சூரி நடித்துள்ளார். கொட்டுக்காளி படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து சர்வதேச விழாக்களுக்கு அந்த படம் அனுப்பப்பட்டு வருகிறது.
கருடன் படப்பிடிப்பு ஓவர்: இந்நிலையில், எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கருடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்கிற சூடான செய்தியை சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஷேர் செய்து வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் கதை: நடிகர் விஜய்க்காக வெற்றிமாறன் வைத்திருந்த கதை தான் கருடன் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், சசிகுமார் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விடுதலை 2 எப்போ?: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் கேப்பில் சூரி அடுத்தடுத்து சில படங்களை ஜெட் வேகத்தில் முடித்து விட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலை 2 படம் முடிவடைந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் 29ம் தேதி சூரி நடிப்பில் உருவாகி உள்ள கருடன் திரைப்படம் முதலில் திரைக்கு வருகிறது என்றும் இந்த ஆண்டு வரிசையாக சூரி நடித்த படங்கள் வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











