தகராறு..கனல் கண்ணனை தாக்க முயன்ற மக்கள்!

விஜய் நடிக்கும் 'சுறா' படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கும், சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தூத்துக்குடி கடல் பகுதியில் நடந்த படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்த பொதுமக்கள் கனல் கண்ணனை தாக்க முயன்றனர்.
விஜய் நடிக்கும் சுறா படப்பிடிப்பு தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது. நேற்று தெர்மல்நகர் கடற்கரைப் பகுதியில் கடலில் விழுந்த மீனவர் ஒருவரை கடலோர காவல் படையினர் காப்பாற்றுவது போன்றும், அதனை மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிடுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்தப் படப்பிடிப்பை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். அப்போது பொதுமக்களை விலகிச் செல்லுமாறு சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்த கனல் கண்ணன் அந்த நபரிடம் இருந்த செல்போனையும் பறித்து வீசினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கனல் கண்ணனைச் சுற்றி வளைத்து தாக்க முயன்றனராம். இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களைச் சமாதானம் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் சிறிது நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்தது.


Click it and Unblock the Notifications











