சேட்டை படப்பிடிப்புக்கு சூர்யா திடீர் வருகை!
டெல்லி பெல்லி படம் தமிழில் சேட்டை என்ற பெயரில் தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி நடிக்கின்றனர்.
கடந்த வாரம் சென்னை பின்னி மில்லில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப் படப்பிடிப்புக்கு திடீர் வருகை தந்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் நடிகர் சூர்யா.

வந்ததோடு மட்டுமல்லாமல், படத்தின் நட்சத்திரங்கள் ஆர்யா, சந்தானம் உள்ளிட்டோருடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தார். படத்தின் கதை மற்றும் ஷூட்டிங் நடக்கும் விதம் பற்றியெல்லாம் கேட்டறிந்தவர், அப்படியே பக்கத்தில் நடக்கும் மாற்றான் படப்பிடிப்புத் தளத்துக்கு சேட்டை குழுவினரை அழைத்துச் சென்று தனது குழுவினருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சூர்யாவின் திடீர் வருகையும், அவர் தங்களிடம் நடந்து கொண்ட விதமும் உற்சாகமளிப்பதாகவும், புதிய அனுபவத்தைத் தருவதாகவும் இருந்தது என இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.
சூர்யா எனக்குப் பிடித்த நடிகர்களுள் ஒருவர். அவர் வந்து என்னை வாழ்த்தியது மிகுந்த சந்தோஷத்தை அளித்தது என்றார் ஹீரோ ஆர்யா.
படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "சூர்யா எங்களுடன் வெகுநேரம் அமர்ந்து சேட்டை படம் வளரும் விதம் குறித்துப் பேசினார். ஒரு பெரிய நடிகர், எங்கள் மீது அக்கறையாக வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது," என்றார்.


Click it and Unblock the Notifications











