காணாமல் போன 'ரீல்'!

சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, குத்து ரம்யா ஆகியோர் நடிக்க, கெளதம் மேனன் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க உருவாகும் படம் வாரணம் ஆயிரம். இப்படம் தொடங்கப்பட்டது முதலே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கெளதமுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.
பஞ்சாயத்து பேசி, வேல் படத்தை முடித்து விட்டு வாரணம் ஆயிரம் படத்தை சூர்யா முடித்து தர வேண்டும் என உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி வேல் படத்தை முடித்து விட்ட சூர்யா தற்போது வாரணம் ஆயிரம் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு புது அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்துள்ளனர் படத்தின் தயாரிப்பு நிர்வாகிகள். தனது திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு சிக்கலான நிலையை ஆஸ்கர் ரவிச்சந்திரன் சந்தித்திருக்க மாட்டார்.
தற்போது படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. படப்பதிவு முடிந்த நான்கு படச்சுருள்களை சென்னைக்கு பிராசஸ் செய்ய அனுப்பி வைக்க முடிவு செய்தார் இயக்குநர் கெளதம். இந்தப் பணிக்காக 2 தயாரிப்பு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
ரீல் பெட்டிகளை தூக்கிக் கொண்டு சென்னைக்கு கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டியது அவர்களுக்கு இடப்பட்ட பணி. அவர்களும் அமெரிக்காவிலிருந்து படப் பெட்டிகளுடன் கிளம்பினர். வழியில் சிங்கப்பூரில் 2 நாட்கள் தங்கியுள்ளனர். பின்னர் சென்னைக்கு வந்து ேசர்ந்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்த பின்னர்தான் அவர்கள் கொண்டு வந்த ரீல் பெட்டிகளைக் காணவில்லை என்று தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
சிங்கப்பூரில் அவர்கள் ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்குதான் படச்சுருள் பெட்டிகள் காணாமல் போயிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு புகார் செய்தனர். காவல்துறைக்கும் புகார் தரப்பட்டது.
சிங்கப்பூர் போலீஸாரும் ஹோட்டலில் சோதனை நடத்தினராம். ஆனாலும் படச்சுருள் இருந்த பெட்டிகள் கிடைக்கவில்லை.
நான்கு படச் சுருட்கள் இருந்த பெட்டி காணாமல் போய் விட்டதால் வாரணம் ஆயிரம் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினர். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்தான் பெரும் அதிர்ச்சியில் இருந்தார்.
இந்தப் படச் சுருட்களில், சண்டைக் காட்சிகள், பாடல்கள், முக்கிய வசனக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படச் சுருட்களின் மதிப்பு ரூ. 2 கோடி. என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் வயிற்றில் பாலை வார்ப்பது போன்ற ஒரு செய்தி ரவிச்சந்திரனுக்கு வந்து சேர்ந்தது. சிங்கப்பூர் விமான நிலையத்தில்தான் இந்த படச் சுருள் பெட்டிகள் தேங்கியிருந்தன. இதை போலீஸார் கண்டுபிடித்துக் கொடுத்தனர். இதையடுத்து சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகள், அவற்றை சென்னைக்கு அனுப்பி வைத்தனராம்.
பெட்டி பத்திரமாக வந்து சேர்ந்த தகவல் அறிந்தவுடன்தான் ஆஸ்கர் ரவிச்சந்திரனும், படக்குழுவினரும் பெரும் நிம்மதி அடைந்தனராம்.


Click it and Unblock the Notifications











