நாகேஷ் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது: ஜெ.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
பழம்பெரும் திரைப்பட நகைச்சுவை நடிகரும், நாடக நடிகருமான நாகேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
நாகேஷ் நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தன்னுடைய அற்புதமான நகைச்சுவை நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தவர்.
நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், கதாநாயகன், குணசித்திரம், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்தவர்.
பல படங்களில் நாகேஷ் என்னுடன் நடித்திருக்கிறார். அதில், "நான்'' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "அம்மனோ சாமியோ'' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள் ஆகும்.
அவரது இழப்பு திரைப்பட துறைக்கு மிகுந்த பேரிழப்பு ஆகும். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. நாடு ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டது.
நாகேஷினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழம்பெரும் திரைப்பட நடிகர் நாகேஷ் திடீர்' மறைவெய்திய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
நாடகம் மற்றும் திரையுலகில் நகைச்சுவை நடிப்பால் மக்கள் மனதில் தனியொரு சிறப்பிடத்தை பெற்று புகழ் பெற்றவர். நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகனுக்கு இணையாக தனது நடிப்பால் முத்திரை பதித்தவர். அதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்று பெருமை பெற்றவர்.
அவரது திடீர்' மறைவு தமிழக திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறுகையில், நடிகர் நாகேஷ் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்ளிட்ட கலைவேந்தர்கள் பலரோடு இணைந்து நடித்து தானும், கலை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர்.
நடிப்பு, வசனம், நடனம் இப்படி பல துறைகளில் தனி வழி அமைத்துக் கொண்டு இக்கால கலைஞர்கள் பலருக்கும், குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் முன் உதாரணமாக வழிகாட்டியாக திகழ்ந்தவர் நாகேஷ். அவரின் மறைவிற்கு எனது சார்பிலும் பா.ஜ.க சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











