கந்தசாமி பார்க்க வரும் குழந்தைகளுக்கு கோழி மாஸ்க்!

கந்தசாமி பெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலைப்புலி தாணு, நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரேயா மற்றும் இயக்குநர் சுசி கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கலைப்புலி தாணு பேசுகையில், கந்தசாமி படம், ஏழையாக இருந்த தன்னை கோபுரத்துக்கு உயர்த்திவிட்டுள்ளது என்றும், வாழ்வில் தான் காணாத பெரும் லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
உலகம் முழுக்க இப்படத்தின் முதல் வார வசூல் மட்டும் ரூ.37 கோடி என்றும் இந்த வாரம் அது ரூ 50 கோடியைத் தாண்டிவிடும் என்றும் கூறிய தாணு, ஒரு வெற்றிப் படம் என கந்தசாமியை அறிவிக்க இதைவிட வேறென்ன வேண்டும் என்றார்.
"சிலர் படம் குறித்து தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக விமர்சிப்பதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் அதை தீவிரமாகக் கையாள நினைத்திருந்தால் 24 பிட் போஸ்டர் போட்டு வெளுத்துவிட முடியும். ஆனால் எனக்கு ரசிகர்கள்தான் நடுவர்கள். அவர்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். நல்ல பத்திரிகைகள் சரியான விமர்சனத்தை வெளியிட்டுள்ளன.
மனநோய் பிடித்த, வக்கிரம் எண்ணம் கொண்ட சிலர் வைத்ததே இந்த சினிமா உலகில் சட்டமாகிவிடாது. நல்ல பொழுது போக்குப் படமான கந்தசாமியை திட்டியவர்கள் விளங்கவே மாட்டார்கள்" என்று உணர்ச்சி வசப்பட்டார் தாணு.
பின்னர், இந்தப் படத்தின் வசூல் மிகச் சிறப்பாக இருப்பதால் அதன் ஒரு பகுதியை, தாங்கள் தத்தெடுத்த கிராமங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்தார் தாணு.
படத்துக்கு குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருப்பதால், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், இனி படம் பார்க்க வரும் ஒவ்வொரு குழந்தைக்கும், படத்தில் விக்ரம் அணிந்து வருவதைப் போன்ற கோழி மாஸ்க் இலவசமாக வழங்கப்படும் என்றார் தாணு.


Click it and Unblock the Notifications











