'ரெட் ஒன்' கேமராவில் 'அச்சமுண்டு'!

ஈஸ்ட்வெஸ்ட் நிறுவனத்திற்காக, அருண் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் படம். பிரசன்னா, ஸ்னேகா தவிர எம்மி விருது பெற்ற ஜான் ஷியாவும் படத்தில் உள்ளார்.
ஹாலிவுட டெக்னீஷியன்கள் பலரும் படத்தில் பங்கேற்றுள்ளனர். படத்தின் பெரும்பாலான பகுதிகளை நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய நகரங்களில் 28 நாட்கள் படமாக்கியுள்ளனர்.
தற்போது படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய வேலைகள் அமெரிக்கா மற்றும் சென்னையில் பிசியாக நடந்துவருகிறது.
ஹாலிவுட் பாணியில் ஷூட்டிங்குக்கு முன்பாகவே இயக்குநர் முன்பு நடிக, நடிகையர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒத்திகை பார்த்துக் கொண்ட பின்னர் இப்படத்தின் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
மேலும் முதல் முறையாக ரெட் ஒன் கேமராவை படப்பிடிப்பில் பயன்படுத்தியுள்ளனர். இந்த கேமராவை கையாண்ட முதல் இந்திய திரைப்படம் இதுதான். மிக மிக துல்லியமாக லொகேஷன்களின் இயற்கை நிறத்தையும், படத்தையும் படம் பிடிக்கும் தன்மை கொண்டது ரெட் ஒன் கேமரா.
ஷூட்டிங்கின் போது காட்சிகள் அனைத்தும் பிலிம் ரோல்களுக்குப் பதில், ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்யப்பட்டு விடும். இதன் மூலம் தேவைப்படும்போது காட்சிகளைப் போட்டுப் பார்த்து கரெக்ட் செய்து கொள்ள முடியும்.
ஸ்டீவன் சோடன்பெர்க், பீட்டர் ஜாக்சன் போன்ற ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் இதற்கு முன்பு இந்த கேமராவை பயன்படுத்தியுள்ளனர். இந்தியப் படம் ஒன்றுக்கு இந்த கேமரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த கேமரா மூலம் காட்சிகளை 4096 X 2096 என்ற ரெசொலூஷனில் பதிவு செய்ய முடியும்.
உலகம் முழுவதும் மொத்தமாக 5000க்கும் குறைவான ரெட் ஒன் கேமராக்கள்தான் புழக்கத்தில் இருக்கின்றனவாம்.
இந்த கேமராவை வாங்குவது சாத்தியமானதல்ல. முதலில் கேமராவுக்கு ரிசர்வ் செய்ய வேண்டும். அதன் பிறகு குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க வேண்டுமாம். கேமராவின் விலைரூ. 8 லட்சமாம்.
படம் எடுக்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் திருட்டு விசிடிக்காரர்கள் என்னமாய் ஆட்டம் போடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











