குடிப்பது போல நடிக்காதீர்கள்! - மன்சூர் அலிகான்

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காந்தி ஜெயந்தி நாளில் மது கொடுமைகளை நினைவு கூர்வது அவசியம். 16, 18 வயது சிறுவர்கள் உள்பட வயதானவர்கள் வரை இன்று மது அடிமைகளாக உள்ளனர். அதோடு பான்பராக், புகையிலை, கவுச்சி என எங்கும் நாறுகிறது.
பள்ளியில் பட்டாணி சாப்பிடும் காலம் போய் பாருக்கு போகின்றனர். சாயா குடிப்பது போய் சாராயம் பழக்கத்துக்கு வந்துள்ளது. கட்சி மாநாடு, ஊர்வலம், சண்டை, பட ரிலீஸ், பண்டிகை, காதல் தோல்வி, கிரிக்கெட் வெற்றி-தோல்வி, மத கலவரம் என எல்லா வற்றுக்கும் குடிக்கிறார்கள்.
கால்கள் தள்ளாட, கண்கள் மங்க, இருமல், மண்டைக்கேற, சிறுநீரகம் சேதமாக, கணையம் வீங்க, பித்தப்பையில் பொத்தல் விழ குடிகாரர்கள் வீழ்ந்து போகிறார்கள்.
காலையில் குடித்து விட்டுத்தான் பலர் வேலைக்கே வருகிறார்கள்.
போதை தெளியாத நாடு எங்கள் தமிழ்நாடு என்ற நிலையையே பார்க்க முடிகிறது. சிங்கள வெறியர்களால் தமிழ் இனம் அழிந்தால் என்ன? அங்குள்ள தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் என்ன? கச்சத்தீவை சிங்களவர்களுக்கு தாரை வார்த்தால் என்ன? நாங்கள் குடித்துக்கொண்டே இருப்போம். கட்- அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வோம். படங்கள் வெளிவந்தால் பட்டாசு வெடிப்போம் என்ற நிலைமைதான் இங்கு உள்ளது.
உலகத்துக்கே காந்தி ஜெயந்தி. எங்களுக்கு பிராந்தி-வாந்தி. சினிமாக்காரர்களில் 90 சதவீதம் பேர் குடிக்கிறார்கள். சென்ற மாதம் ஒரு பெரிய நடிகர் குடித்து குடித்து செத்தார். அரசியல்வாதிகளும் குடிக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 230 பேர் குடித்து நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செத்து சாகிறார்கள்.
போதையில் இருந்து நாட்டை மீட்பது அவசியம். மனைவியின் மகிழ்ச்சி, குழந்தைகளின் களிப்பு, உழைப்பின் வேர்வையில்தான் போதை இருக்கிறது என்பதை உணர வேண்டும். நடிகர்கள் குடிப்பது போல் நடிப்பதை தவிர்க்க வேண்டும். வருங்கால இந்தியாவே நம் இளைஞர்கள்தான். அவர்களை காப்பாற்றுவோம்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











