2009- நம்பிக்கை படங்கள்!-பாகம் -1

இந்த 2009-ம் எந்திரன் ஆண்டாகவே மலர்ந்திருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை பெரும் எதிர்ப்பார்புக்குள்ளாகியிருக்கும் படங்களில் முதலிடம் ரஜினியின் எந்திரனுக்கே.
நான் கடவுள்: ஒரு சூப்பர் ஸ்டார் இல்லாவிட்டாலும், அவர் நடித்த படத்துக்கு நிகரான பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ள படம் பாலா- இளையராஜா கூட்டணியில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நான் கடவுள்.
மூன்று வருடங்கள் ஒரு தவம் மாதிரி இருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார், கோடம்பாக்கத்தின் 'திரைஞானி' பாலா. அவரது படைப்புக்கு உயிர் கொடுத்திருக்கிறது இசைஞானியின் ஆர்மோனியம். 'பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ண என் படம் கரும்போ, பட்டாசோ அல்ல... ஜீவனுள்ள ஒரு படைப்பு. அது முழுமையடையும்போதுதான் வெளியாகும்' என்ற ' மிஸ்டர் பர்பெக்ஷனிஸ்ட்' பாலாவின் பிடிவாதத்துக்கு விருதுகள் காத்திருப்பது நிஜம்.
இந்தப் படத்தைக் காண தமிழகம் மட்டுமல்ல... பிறமொழி ரசிகர்களும்கூட ஆவலாக இருப்பதாக நடிகர் விக்ரம் நேற்று கூறினார். அது மிகையான வார்த்தையில்லை.
ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ, வெளியான முதல் நாளிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல கடைகளில் ஆடியோ சிடி கிடைக்காத நிலை. எஃப்எம்கள் புண்ணியத்தால் ஆடியோ மார்க்கெட்டே விழுந்து கிடக்கும் இந்தச் சூழலில், வருடத்தின் முதல் நாளே நான் கடவுள் ஆடியோ சாதனை படைக்க ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறியாகவே படுகிறது.
கந்தசாமி: விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இன்னொரு படம் கந்தசாமி. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சாம்பிள் பாடல்களே கலக்கலாக வந்திருந்தன.
விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட உள்ளது. தமிழ் ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட் இந்தப் படம்.
சுல்தான்- தி வாரியர்: இந்தப் படத்தை மக்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்ற சந்தேகம் ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல... இந்தப் படத்துக்கு ரூ.70 கோடியை செலவழித்திருக்கும் ஆக்கர்- வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோக்களுக்கும் உண்டு. ஆனால் அனிமேஷன் படங்களுக்கு உள்ளூர் மார்க்கெட்டை விட உலக மார்க்கெட் ஸ்ட்ராங்க் என்பதால் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் எஸ்.ராமகிருஷ்ணன். பாபா படத்தின் வசனகர்த்தா. சர்வதேச அளவில் மிகச் சிறப்பான வரவேற்பை சுல்தான் பெறும் என நம்புகிறார்கள்.
ரஜினியை அனிமேட் செய்திருக்கும் விதம் இங்குள்ள ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஹ்மானின் இசையில் 5 பாடல்கள். விரைவில் இசை வெளியீடு நிகழ உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன்: இதுவும் ஒரு பிரமாண்டப் படம்தான். செல்வராகவன் தன் பாணியிலிருந்து விலகி, ஒரு பேண்டஸி படம் தரவேண்டும் என விரும்பியதன் விளைவு இந்தப் படம். பருத்தி வீரன் படத்துக்குப் பின் கார்த்தி நடித்துள்ள படம். ரீமா சென், ஆண்ட்ரியா நாயகிகள். இந்தப் படத்தில் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மற்றும் செல்வராகவன் மனைவி சோனியா அகர்வால் ஆகியோர் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
யுவன் இசையமக்க ஒப்புக் கொண்டு பின்னர் செல்வாவுடன் ஏற்பட்ட பிணக்கில் வெளியேற ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குசேலன் பாடல்களில் செய்த சொதப்பலை இந்தப் படத்தில் சரிகட்டுவார் பிரகாஷ் என நம்புகிறார்கள். பார்க்கலாம்.
(தொடரும்)


Click it and Unblock the Notifications











