twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருப்புகழ், திருவாசகம் ஒலிக்க தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமணம்!

    By Shankar
    |

    Karthi Weds Ranjani
    கோவை: நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் முன்னணி நடிகருமான கார்த்தியின் திருமணம் இன்று கோவையில் சிறப்பாக நடந்தது.

    தமிழர் மரபுப்படி திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ் மறைகள் முழங்க, மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார் கார்த்தி.

    நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் நடிகருமான கார்த்திக்கும் ஈரோடு அருகே உள்ள கிலாம்பாடியைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் கோவை கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்றது. இந்திரலோகம் போல அலங்கரிக்கப்பட்டிருந்த கொடிசியா அரங்கில் திரைப்பட கலை இயக்குநர் சந்திரசேகர் திருமணத்துக்கென ஸ்பெஷல் மேடை அமைத்திருருந்தார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.35 மணிக்கு நடிகர் கார்த்தி மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார்.

    திருமணத்தில் பங்கேற்பதற்காக அதிகாலை 4.30 மணிக்கே உறவினர்கள் கொடிசியா அரங்கிற்கு வரத் தொடங்கினார்கள். காலை 5 மணிக்கு மணமகனின் தந்தை நடிகர் சிவகுமார் வந்தார். அவர் உறவினர்களை வரவேற்று அரங்கிற்கு அழைத்து சென்றார்.

    5.20 மணிக்கு மணமகன் நடிகர் கார்த்தி திருமண மண்டபத்திற்கு வந்தார். சற்று நேரத்தில் மணமகள் ரஞ்சனி வந்தார். அவர்கள் இருவரும் மேடை அருகே தனி தனியாக அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நலுங்கு வைக்கப்பட்டது.

    காலை 5.40 மணிக்கு மணமக்கள் தனித்தனியாக குடை பிடித்தபடி மணமேடையை சுற்றி வந்தனர். மண மேடையில் 2 கலசங்கள் வைக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டது. மணமக்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். காலை 6.35 மணிக்கு மணமகனின் தந்தை நடிகர் சிவகுமார் தாலியை மணமகன் கார்த்தி கையில் எடுத்துக் கொடுத்தார். அவர் மணமகள் ரஞ்சனி கழுத்தில் அணிவித்தார்.

    திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ் மறைகள் ஓத தமிழர் மரபுப்படி திருமணத்தை பழ. குமரலிங்கம் நடத்தி வைத்தார்.

    மணமகள் கழுத்தில் நடிகர் கார்த்தி தாலி கட்டியதும் அங்கு குவிந்திருந்த முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

    குவிந்த நட்சத்திரங்கள்...

    நடிகர்கள் பிரபு, ராஜேஷ், பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சித்தார்த், சரவணன், நடிகைகள் ராதிகா,நக்மா, பூர்ணிமா பாக்கியராஜ், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.வி . உதயகுமார், ஹரி, சங்கர் தயாள், மனோபாலா, பாலா, சுசீந்திரன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி சுசித்ரா, பாரதி வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், டாக்டர். தங்கவேலு, கோவை மணி, திருப்பூர் பாலு ஆகியோர் வாழ்த்தினார்கள்.

    வாகை, செண்பகம், துளசி கன்றுகள் பரிசு

    திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பலத்துடன் மரக் கன்றுகள் வழங்கப்பட்டது. வாகை, செண்பகம், துளசி ஆகிய மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

    திருமணத்துக்கு வந்தவர்களை நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, மற்றும் மணமகள் ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி - ஜோதி மீனாட்சி ஆகியோர் வரவேற்றனர்.

    வரவேற்பு

    முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமக்களை நடிகர் சத்யராஜ், அவரது மகன் நடிகர் சிபி, நடிகை நக்மாவின் தங்கை ரோஷினி, டைரக்டர் சுராஜ், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளர் ஈஸ்வரன், சூலூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ., பனப்பட்டி தினகரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, உள்ளிட்டோர் வாழ்த்தினார்கள்.

    7-ம் தேதி சென்னையில் வரவேற்பு

    கார்த்தி - ரஞ்சனி தம்பதிகளுக்கு வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் சிறப்பு வரவேற்பு நடத்தப்படுகிறது.

    இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    English summary
    Actor Karthi tied the holy knot to Ranjani today morning at the marriage held in Coimbatore. Lot of film stars and VVIPs gathered to the event and wished the newly married couples.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X