மேக்னா மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் பாலச்சந்தர் மகள் புகார்

கவிதாலயா நிறுவனம் இப்போது ஜீவன் நாயகனாக நடிக்கும் கிருஷ்ணலீலை எனும் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் மேக்னா என்பவரை புதுமுக நாயகியாக அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த மேக்னா யார் தெரியுமா... விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில், அவருடைய காதலியாக நடித்த பிரமிளா ஜோஷியின் மகள்.
இந்த படத்தை ஸெல்வன் டைரக்டு செய்கிறார். டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயம் நிறுவனம் சார்பில் அவருடைய மகள் புஷ்பா கந்தசாமி தயாரிக்கிறார்.
படத்தில், ஜீவனுக்கு ஜோடியாக மேக்னா நடித்து வந்தார். பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதாகத் திட்டம். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கதாநாயகி மேக்னா கிருஷ்ண லீலை படத்தில் நடித்து முடித்துக் கொடுக்காமல், வேறு ஒரு படத்தில் நடிக்க சென்று விட்டார்.
உடனடியாக பட அதிபர் புஷ்பா கந்தசாமி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார். அதில், ஒப்பந்தப்படி, மேக்னா எங்கள் படத்தில் நடித்து முடித்துக் கொடுத்த பிறகுதான் வேறு படத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர், எங்கள் படத்தை முடிப்பதற்கு முன்பே எங்க வீட்டு பிள்ளை' என்ற படத்துக்கு கால்ஷீட்' கொடுத்து இருக்கிறார்.
அவரிடம் நாங்கள் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும், பலன் இல்லை. எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டார். இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவரை, கிருஷ்ண லீலை படத்தில் நடித்து, முடித்துக்கொடுக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேக்னாவை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.


Click it and Unblock the Notifications











