'பொம்மலாட்டத்தின்' பொம்மலாட்டம்!

இது குறித்து பாரதிராஜா கூறுகையில்,
தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பணியாற்றி, பல சாதனைகள் படைத்த எனக்கு இந்த படத்தை எடுத்த பிறகு வெளியிடுவதில் சிக்கல் என்றால் சினிமா உலகின் நிலைமையை என்னவென்று சொல்வது?
பொம்மலாட்டம் படத்தை கார்பரேட் நிறுவனததை வைத்து வெளியிட நினைத்ததால் தாமதம் ஏற்பட்டது. ஆறு மாதம் விளையாட்டு காட்டினார்கள். சிறு பல்லியை விட்டு விலகி முதலையிடம் மாட்டினோம். இப்போது அதில் இருந்து மீண்டு வெளியே வந்து விட்டேன்.
கார்ப்பரேட் நிறுவனங்களால் தமிழ் சினிமா தடம் மாறிக் கிடக்கிறது. நல்லவேளை தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தொய்வை சந்தித்துள்ளது. இதே நிலை நீடித்தால் பரவாயில்லை. மீண்டும் அவை களத்திற்கு வந்தால் சிலரின் சம்பளம் மட்டுமே உயருமே தவிர, கலைத்தாகம் கொண்ட படைப்புகள் திரைக்கு வருவது சொற்பமே.
நாகிரெட்டி போன்றோர் காலத்தில் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் எல்லோருமே ஒவ்வொரு படத்தையும் சொந்த படமாகவே பாவித்து வெளியிட்டனர்.
அவர்களிடம் கலை நோக்கம் இருந்தது. தங்கள் தொழிலை காதலித்தனர். அதனால் தான் சிறப்பான படங்கள் தயாராயின. நான் கூட சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தேன்.
ஆனால் இப்போது சினிமா முழுக்க முழுக்க வியாபாரமாகி விட்டது. எத்தனை கோடி வரும் என்று தான் கணக்கு பார்க்கின்றனர். கலை ஆர்வம் என்பதே இல்லை.
இன்றைய இளம் இயக்குனர்களும், கலைஞர்களும் எவ்வளவு போட்டால் எவ்வளவு எடுக்கலாம் என்று சினிமாவை வியாபாரமாக பார்க்கிறார்களே தவிர சினிமா ஆர்வத்தோடு அவர்கள் வருவதில்லை.
பொம்மலாட்டம் படத்தை இப்படி ஒரு படம் வந்தது கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எடுத்துள்ளேன்.
ரத்தமே இல்லாமல் சிவப்பு ரோஜாக்கள் படத்தை கிரைம் பின்னணியில் தந்தவன் நான். அது போல இதுவும் கத்தி இல்லாத கிரைம் படம் தான். மண் வாசனை படம் ஒரு உண்மைக் கதை என்பதை சொல்லியிருக்கிறேன். அதுபோல பொம்மலாட்டமும் உண்மை சம்பவம் தான்.
3 கொலைகள் நடக்கின்றன. நிஜத்தில், தவறு செய்தவர்களை போலீஸ் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் படத்தில் குற்றவாளிகள் யார் என்பதை சொல்லியிருக்கிறேன்.
இந்தப் படத்தை ஜெர்மனியைச் சேர்ந்த பெண் எடிட்டர் தான் எடிட்டிங் செய்தார். அந்த நாட்டின் பாடப் புத்தகத்தில் இந்த சினிமா இடம் பெற்றுள்ளது. அர்ஜூன் சிபிஐ அதிகாரி கேரக்டரில் நிதானமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
இந்தியில் தமிழ் நடிகைகள் தான் அங்கீகரிக்கப்படுகின்றனர். இங்குள்ள இயக்குனர்களுக்கு வரவேற்பு இல்லை. இந்தி திரையுலகில் படமெடுக்க நான் முயற்சித்த போது சரியாக அமையவில்லை. அந்த வெறியோடு இந்த படத்தை எடுத்துள்ளேன். இப்படத்துக்கு பின் என்னையும் அழைப்பார்கள் என்றார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications